The Solemnity of Pentecost

தூய ஆவியானவர் பெருவிழா

2022.06.05

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நமக்கு உரிமைப்பேறு அளித்து, நம்மை உறுதிப்படுத்தி வரும் நம் இறைத்தந்தையின் நாமத்தில் நல்வாழ்த்துகள். இன்று தூய ஆவியாரின் விழாவைக் கொண்டாடுகின்றோம். இத்தினத்தில் நாம் தூய ஆவியாரின் வரங்கள், கனி, கொடைகள் ஆகியவற்றைப் பெறவும், இறைவனுக்கு நன்றி செலுத்தவும் ஒன்று கூடியுள்ளோம்.
ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நாம் வாழ்வோம். ஆண்டவரின் ஆவியார் உள்ள இடத்திலும், இதயத்திலும் விடுதலையும், மகிழ்ச்சியும் உண்டு. ஆண்டவரின் ஆவியாரை இதயத்தில் இருக்க வைத்து இயங்குபவர்களின் வாழ்வில் வல்லமை இருக்கும், அன்பு இருக்கும், அரும் பெரும் செயல்கள் நடைபெறும். ஏனெனில் தூய ஆவியார் நம்மையெல்லாம் நிறை உண்மையை நோக்கி வழிநடாத்துகின்றார் என்பவைகளே இன்று நம்மை வந்தடையும் இறைவனின் செய்திகளாகும்.

ஆகவே நாம் அனைவரும், ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடிப்போம். கிறிஸ்துவின் துன்பங்களில் நாமும் பங்கேற்போம். தூய ஆவியாரின் அசைவுகளுக்கு இசைந்து கொடுப்போம். அவர் அருளும் புதியதும், புனிதமானதுமான இயல்புகளை அணிந்து கொள்வோம். இறைவனின் சாட்சிகளாய் வாழ இத்திருப்பலி வழியாக நம்மை அர்ப்பணிப்போம்.

முதல் வாசகம்

 

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

 

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்  2:1-11

 

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.

 

அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும் யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!” என்றனர்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்   திபா 104:1, 24. 29-31, 34

 

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

 

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
பல்லவி

 

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;  மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
பல்லவி

 

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.

 

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்  8: 8-17

 

சகோதரர் சகோதரிகளே,

ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

 

ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.

 

கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை;  மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

 

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்   14: 15-16, 23-26

 

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

 

என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும் போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்;  நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்”.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1.  மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கும் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் . நிறை உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, அவர்கள் ஆன்மிக வல்லமையும், ஆற்றலும் மிக்கவர்களாயும், மக்களை நிறை உண்மையை நோக்கி வழி நடத்துபவர்களாகவும் செயற்பட வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2.  எங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருகின்ற  தூய ஆவியாராம் துணையாரை எங்களுக்குத் தரும் நல்ல தந்தையே!

உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் நீர் கற்றுத்தரும் அனைத்தையும் முழுமையாகக் கடைப்பிடித்து, தூய ஆவியாரின் அசைவுகளுக்கு இசைந்து கொடுத்து, அவர் அருளும் புதியதும், புனிதமானதுமான இயல்புகளை அணிந்து கொண்டு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ள ஆண்டவரே!

ஆவியின் துணையால், எங்கள் உடலின் தீச்செயல்களைச் சாகடித்து. கிறிஸ்துவின் துன்பங்களில் நாமும் முழுமையாகப் பங்கேற்று உறுதியோடு கிறிஸ்துவுக்கு சாட்சியம் பகர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4.  அன்புத் தந்தையே இறைவா!

உமது பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு பிளவுபட்டுக் கிடக்கும் கிறிஸ்தவ சபைகள் உண்மையின் ஒளியை கண்டுணர்ந்து ஒற்றுமையின் சாட்சிகளாய் மாறும் ஓர் உன்னத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.