பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு
2023.02.19
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நமக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றவருமான நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் பொதுக்கால ஏழாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
இறையன்பும், பிறரன்பும், தூய்மையும், தாழ்மையும் கொண்டவர்களாய் நாம் வாழுவதைத்தான் இறைவன் விரும்புகின்றார் என்பதை இன்றைய இறைவார்த்தைகள் பிரதிபலித்துக் காட்டுகின்றன. அத்தோடு நமது உடல் என்பது கடவுளுடைய கோவில் என்றும் அங்கே தூய ஆவியார் குடியிருக்கின்றார் என்றும் நமக்கு தெரிவிக்கப்படுகின்றது.
எனவே தூய ஆவியார் குடியிருக்கும் கடவுளுடைய கோவிலே நமது உடல் என்பதை ஆழமாக உணர்ந்து ஏற்றுக் கொண்டவர்களாய் இறையன்பும், பிறரன்பும், தூய்மையும், தாழ்மையும் கொண்டவர்களாய் வாழ இத்திருப்பலியில் வல்லமை கேட்டுச் செபிப்போம்
முதல் வாசகம்
உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!.
லேவியர் நூலிருந்து வாசகம் 19:1-2, 17-18
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 103: 1-4.8, 10.12-13
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!
பல்லவி
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்.
பல்லவி
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.
பல்லவி
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிவில் உள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:16-23
சகோதர சகோதரிகளே,
நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.
எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்கவைப்பர்”. மேலும் “ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.”
எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்கு உரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்கு உரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 1யோவா 2:5
அல்லேலூயா, அல்லேலூயா ! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:38-48
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ” ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டு விடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ‘இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்.
நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. இரக்கமும் அருளும் கொண்டவரான தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் இறையன்பும், பிறரன்பும், தூய்மையும், தாழ்மையும் கொண்டவர்களாய் பணியாற்ற வேண்டிய உணர்வினை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எம்மீது இரக்கம் காட்டும் தந்தையே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் எங்கள் பகைவரிடம் அன்பு கூரவும், எங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டவும், தூய்மையும், தாழ்மையும் கொண்டவர்களாய் வாழவும் வேண்டிய மனநிலையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்யும் தந்தையே இறைவா! உமது அருட்துணை அதிகமாகத் தேவைப்படுவோருக்கும், நிறைவு செய்யப்படாத தேவைகளோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் சிறப்பான அருள் உதவிகளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நிறைவுள்ளவரான தந்தையே இறைவா! இவ்வாண்டில் பல பரீட்சைகளை எதிர்நோக்கியுள்ள அனைத்து மாணவர்களையும் ஆசீர்வதித்து அவர்கள் தாங்கள் எழுதும் பரீட்சைகள் வழியாகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கு உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.