16th Sunday of Ordinary Time

பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு

2022.07.17

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் அவலங்களைப் போக்கும் நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத் திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

ஆண்டவரின் இரக்கமிக்க கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் என்று இன்று நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறப்படுகின்றது. ஆண்டவரின் இரக்கமிக்க கூடாரத்தில் தங்கிட வெறும் சமயச் சடங்குகளை மட்டும் நிறைவேற்றுதல் பயன் தராது. மாறாக ஆண்டவரின் அறிவுரைகளைப் பின்பற்றி அதன்படி வாழ்ந்தால் மட்டுமே அந்த உன்னத பேற்றினை அடையலாம்.

எனவே நாம் மாசற்றவராய் நடப்போம்! நேரியவற்றைச் செய்வோம். உளமார உண்மை பேசுவோம். நம் நாவினால் புறங்கூறாதிருப்போம். அடுத்தவரைப் பழித்துரையாதிருப்போம். இவ்வாறான வாழ்க்கை வாழ அருள்வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

என் தலைவரே, நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!

 

தொடக்க நூலிலிருந்து வாசகம்   18: 1-10

 

அந்நாள்களில்

 

ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள் முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார்.  “நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.

 

அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, “விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு” என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார்.

 

பின்பு அவர்கள் அவரை நோக்கி, “உன் மனைவி சாரா எங்கே?” என்று கேட்க, அவர், “அதோ கூடாரத்தில் இருக்கிறாள்” என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர்: “நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்  திபா 15: 2-5

 

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

 

மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர். உளமார உண்மை பேசுபவர். தம் நாவினால் புறங்கூறார்.

பல்லவி

 

தம் தோழருக்குத் தீங்கிழையார். தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்.        ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்.               

பல்லவி

 

தம் பணத்தை வட்டிக்குக் கொடார். மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார். – இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.

பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

மறைந்திருந்த இறைத்திட்டம் இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்  1: 24-28

 

சகோதரர் சகோதரிகளே!

 

உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என் மூலம் இறைவார் த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன்.

 

நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  லூக்கா 8:15

 

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா

 

நற்செய்தி வாசகம்

மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்   10:38-42

 

அக்காலத்தில்

 

அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட் டுக் கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

 

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

 

ஆண்டரின் அருள்வாக்கு

 

மன்றாட்டுக்கள்

 

1. வாக்குறுதிகளை நிறைவேற்றும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் தங்களது அர்ப்பணத்தின் போது உமக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறாது, அதைப் பிரமாணிக்கமாய் காத்து, இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன்படி வாழ்வதற்று வேண்டிய ஞானத்தை அளித்திட வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

 

2.  என்றும் நல்ல பேறுகளை எமக்களிக்கும் தந்தையே! நாம் மாசற்றவராய் நடக்கவும், நேரியவற்றைச் செய்யவும் உளமார உண்மை பேசவும்  எம் நாவினால் புறங்கூறாதிருக்கவும், அடுத்தவரைப் பழித்துரையாதிருக்கவும் எமக்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3.  நீதியோடு ஆளும் தந்தையே இறைவா! தம்மை நேர்மையாளர் எனக் காட்டிக்கொண்டு , மக்களை தவறான பாதையில் அழைத்துச் செல்லும் அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் தங்கள்  தீய போக்கிலிருந்து மாறி உண்மையின் வழிக்குத் திரும்பிடச் செய்தருள வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4.  புத்துயிர் அளிக்கும் தந்தையே இறைவா! இன்றைய நாட்களில் உமது இரக்கம் அதிகமாகத் தேவைப்படுவோருக்கு சிறப்பான ஆசீர்வாதங்களைக் கொடுத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.