பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு
2022.08.14
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் பக்கம் சாய்ந்து நமது மன்றாட்டைக் கேட்டருளும். நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
தம் இறைவாக்கினர்களையும், தம் பணி செய்வோரையும் இறைவன் எல்லாவிதமான ஆபத்துக்களிலும், நெருக்கடிகளினின்றும் காப்பாற்றுகின்றார் என்பதை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துச் சொல்லுகின்றன. அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார். கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார். என் காலடிகளை உறுதிப்படுத்தினார் என்னும் இறைவார்த்தைகள் மேலும் இதனை உறுதி செய்கின்றன.
எனவே நாமும் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்ட இயேசுவைப்போல, நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். இதற்கான மனவுறுதியையும், அருள்நலன்களையும் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
நாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே!
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10
அந்நாள்களில்
தலைவர்கள் அரசனைப் பார்த்து, “இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை” என்றார்கள்.
அதற்கு அரசன் செதேக்கியா, “நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே” என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.
எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, “என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது” என்று கூறினார்.
அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபெது மெலேக்கை நோக்கி, “உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு” என்று கட்டளையிட்டான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 40: 1-3, 17
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
பல்லவி
அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.
பல்லவி
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.
பல்லவி
நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4
சகோதரர் சகோதரிகளே,
திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 10:27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:49-53
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்”.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. அனைத்து ஆபத்துக்களிலும், நெருக்கடிகளினின்றும் காப்பாற்றும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரையும், உலக ஆசைகள் என்னும் அழிவின் குழியிலிருந்தும், பாவம் என்னும் சேறு நிறைந்த பள்ளத்தாக்கிலிருந்தும் மீட்டு நம்பிக்கை, தூய்மை என்னும் பாறைகளில் காலூன்றி நிற்க வேண்டிய அருளை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எம் துணைவரும், மீட்பருமாகிய தந்தையே இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைத்துக் கொண்டு, எம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளி விட்டு, எமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவதற்கு வேண்டிய அருள் வளங்களை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. மண்ணுலகில் அன்பு என்னும் தீயை மூட்டுகின்ற தந்தையே இறைவா! உலக நாடுகள் முழுவதிலும் பிளவுகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தும் எல்லாத் தீய சக்திகளையும் முறியடித்து அமைதியையும், நிறைவான சுதந்திர வாழ்வையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளிக்கும் தந்தையே இறைவா! பல்வேறுவிதமான நோய்களால் தாக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருப்போர் அனைவரையும் உமது கருணையால் குணப்படுத்தி, உமது பேரன்பால் அவர்களை நிறைவுபடுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.