13th Sunday of Ordinary Season

பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு

2022.06.26

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! வாழ்வின் வழியை நாம் அறியச் செய்கின்றவரான நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் பொதுக்காலப் பதின்மூன்றாம்  ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நமக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது. மேலும் நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்ந்தால், ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டோம் என்னும் சிந்தனையோடு,  மனிதர் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவர் என்னும் எச்சரிக்கையும் விடப்படுகின்றது.

 

நிலைவாழ்வு அளிக்கும் இறைவனின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டவர்களாக, பாவத்திற்கு அடிமையாகும் நமது இயல்பை அகற்றி,  நம் மீது நாம் அன்பு கூர்வது போல நமக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகாட்டி தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்றவர்களாய் வாழ அருள்வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

எலிசா புறப்பட்டுப் போய், எலியாவுக்குப் பணிவிடை செய்தார்.

 

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 16, 19-21

 

அந்நாள்களில்

ஆண்டவர் எலியாவை நோக்கி, “ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்” என்றார்.

 

எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார். எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டு விட்டு எலியாவிடம் ஓடிவந்து,  “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன் பின் உம்மைப் பின் செல்வேன்” என்றார். அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்து விட்டேன்!” என்றார்.

 

எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல் திபா 16: 1-2,5,7-11

 

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

 

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து. அவரே என் கிண்ணம். எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே.
பல்லவி

 

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே,  நான் அசைவுறேன்.
பல்லவி

 

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர்.
பல்லவி

 

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

 

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்  5: 1,13-18

 

சகோதரர் சகோதரிகளே,

 

கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

 

அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். “உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!

 

எனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி    1சாமு 3:9: யோவா 6:68

 

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்   9:51-62

 

அக்காலத்தில்

இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

 

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

 

அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும்,  வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

 

இயேசு மற்றொருவரை நோக்கி,  “என்னைப் பின்பற்றிவாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

 

வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி,”கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

 

ஆண்டவரின்  அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

1.  எம் உரிமைச் சொத்தும், எம் வலப்பக்கம் உள்ளவருமான தந்தையே இறைவா! எம் திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் வாழ்வின் வழியை நன்கு அறிந்து தாங்கள் அழைக்கப்பட்டதன் நோக்கத்தை நன்கு உணர்ந்து பணியாற்ற வேண்டிய ஞானத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகளைக் கொண்டுள்ள தந்தையே! பாவத்திற்கு அடிமையாகும் எமது இயல்பை அகற்றி, எம் மீது நாம் அன்பு கூர்வது போல எமக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகாட்டி தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்றவர்களாய் வாழ, எமக்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3.  எமக்கு அறிவுரை வழங்கும்  தந்தையே இறைவா! உலகில் என்றும் அமைதியை நிலைநாட்டவும், மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் நல்வாழ்வுக்காக உழைக்கவும், சமத்துவத்தைப் பேணவும் வேண்டிய நல்லுள்ளத்தை அனைத்துத் தலைவர்களுக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4.வாழ்வின் வழியை அறியச் செய்யும் தந்தையே இறைவா! இன்றைய இளம் தலைமுறையினர் உண்மையான ஆன்மிக வாழ்வைக் கண்டடைந்து நீர் காட்டும் வழியில் சென்றிட வேண்டிய மனநிலையை அவர்களிடம் உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.