பொதுக்காலம் பதின்நான்காம் ஞாயிறு
2022.07.03
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்யும் நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலப் பதின்நான்காம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
நம்பிக்கையையொட்டிய சடங்குகளும், சம்பிரதாயங்களும், வீணான விவாதங்களும் பயனற்றவை. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. நாம் இறைவனின் மக்களாய் மாறும்போது நமது இதயம் மகிழ்ச்சி கொள்ளும், நமது எலும்புகள் பசும்புல்போல் வளரும். ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் மக்களாகிய நமக்குக் காட்டுவார் என்பவையே இன்றைய திருப்பலியின் முக்கிய செய்திகளாக அமைகின்றன.
எனவே நாம் அனைவரும் புதிய படைப்பாகி, நம் முன்மாதிரிகையான வாழ்வாலும் பணியாலும் கடவுளைப் போற்றி ஆர்ப்பரித்து அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடி. அவரது புகழை மேன்மைப்படுத்தி, இரக்கத்தை பரிசாக அனைவருக்கும் கொடுக்கும் இறைமக்களாக வாழ அருள்வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14
எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள். அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள். அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.
ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன். பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன். நீங்கள் பால் பருகுவீர்கள். மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள். மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன். எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.
இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும். ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 66: 1-7,16,20
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை என்று சொல்லுங்கள்
அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர் என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.
கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்; அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்!
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்; என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி!
இரண்டாம் வாசகம்
என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 14-18
சகோதரர் சகோதரிகளே
நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள் ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது.
இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!
இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.
சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி கொலோ 3:15,16
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:1-12,17-20
அக்காலத்தில்
இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது:
“அறுவடை மிகுதி. வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள். ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம். வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும். இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊரின் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறி விடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள் எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர்.
அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. உம் ஆற்றலைத் உம் ஊழியருக்குக் காட்டும் தந்தையே இறைவா! பணிவாழ்வை பலமிழக்கச் செய்யும் தீமைகள் அதிகரித்துவிட்ட இவ்வுலகில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழவும், இத்தீமைகளால் தாக்கப்படாமல் இரக்கத்தின் பணியாளர்களாகப் பணியாற்றவும் வேண்டிய ஞானத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எம் மன்றாட்டைப் புறக்கணியாத தந்தையே! நாங்கள் புதிய படைப்பாகி, எம் முன்மாதிரிகையான வாழ்வாலும் பணியாலும் உம்மைப் போற்றி ஆர்ப்பரித்து உமது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடி. உமது புகழை மேன்மைப்படுத்தி, இரக்கத்தை பரிசாக அனைவருக்கும் கொடுக்கும் இறைமக்களாக வாழ எமக்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் எம்மைத் தேற்றும் தந்தையே இறைவா! பல்வேறுவிதமான நோய்களாலும் தாக்கப்பட்டு வேதனையுறுவோர் அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களுக்கு வேண்டிய நற்சுகத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. கடலை உலர்ந்த தரையாக மாற்றிவிடும் தந்தையே இறைவா! இன்றைய இளம் தலைமுறையினர் உண்மையான ஆன்மிக வாழ்வைக் கண்டடைந்து நீர் காட்டும் வழியில் சென்றிட வேன்டிய மனநிலையை அவர்களிடம் உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.