18th Sunday of Ordinary Season

பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு

2022.07.31

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தலைமுறைதோறும் நமது புகலிடமாய் இருக்கின்ற நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

“எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்; மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்பது இன்று நமக்குத் தரப்படும் மிக முக்கியமான செய்தியாகும். இச்செய்தி இவ்வுலகில் நமது நிலையாமை பற்றிய உண்மையைப் புரிந்து கொண்டு வாழ அழைக்கின்றது. உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார், என்னும் வார்த்தைகளும், இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்  என்னும் பவுலடியாரின் கூற்றும் எதுவும் நிலையற்றவை ஆனால் இறையன்பு மாத்திரமே நிலையானது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆகவே உலகப்போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிட்டு, பொய்யை விலக்கி, பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்து புது வாழ்வு வாழ அருள்வரம் கேட்டுத்  தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

உழைத்துச் சேர்த்த சொத்தை, அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார்.

 

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம்  1: 2, 2:21-23

 

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்.

 

ஏனெனில்,  ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற் சிக்காகவும், வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்;  வேலையில் தொந்தரவு,  இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்  திபா 90: 3- 6, 12-14, 17

 

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

 

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர். ஏனெனில்,  ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.
பல்லவி

 

வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும்.
பல்லவி

 

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.
பல்லவி

 

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.

 

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5,9-11

 

சகோதரர் சகோதரிகளே,

 

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

 

ஆகவே உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு,  தீய நாட்டம்,  சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

 

ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு,  புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர் கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும்,  யூதர் என்றும்,  விருத்தசேதனம் பெற்றவர் என்றும்,  விருத்தசேதனம் பெறாதவர் என்றும்,  நாகரிகம் அற்றோர் என்றும்,  சீத்தியர் என்றும்,  அடிமை என்றும்,  உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  மத் 5:3

 

அல்லேலூயா,  அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா

 

 

நற்செய்தி வாசகம்

நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:13-21

 

அக்காலத்தில்

 

கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம்,  “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.

 

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாய் இருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன். என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, ‘என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’ எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லா தவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1.ஞானமிகு உள்ளத்தை வழங்கிடும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், உமது சாயலுக்கேற்பத் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு. இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றிய ஆர்வமுடையவர்களாகவும்,  அதன்மூலம் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிடும் மனப்பக்குவத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2.தலைமுறைதோறும் எமது புகலிடமாய் இருக்கின்ற தந்தையே இறைவா! நாம் உலகப்போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு,  தீய நாட்டம்,  சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்து விட்டு, பொய்யை விலக்கி,  பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்து புது வாழ்வு வாழ உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3.மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்யும் தந்தையே இறைவா! உலகில் பெருகி வரும் அடக்குமுறைகளும்,  சுயநலத் தேடல்களும்,  பாகுபாட்டுக் கலாசாரமும் ஒழிந்து மக்கள் நிறைவோடும், நிம்மதியோடும் வாழ்ந்திட உமது பேரன்பின் ஆற்றலை வெளிப்படுத்தி இத்தீமைகளை முறியடித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4.உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளிக்கும்  தந்தையே இறைவா! பல்வேறு விதமான நோய்களால் தாக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருப்போர் அனைவரையும் உமது கருணையால் குணப்படுத்தி,  உமது பேரன்பால் அவர்களை நிறைவுபடுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.