32nd Sunday in Ordinary time

பொதுக்காலம் முப்பத்ரெண்டாம் ஞாயிறு

2022.11.06

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! அனைத்துலக அரசராக இருந்து,  நாம் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு நம்மை உயிர்த்தெழச் செய்யும்,  நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திரெண்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

“எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றினாலும் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார். எனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே” என்னும் துணிவுமிக்க இன்றைய முதல் வாசகத்தின் நம்பிக்கை அறிக்கை நமது கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வை மீளாய்வு செய்து பார்க்க எம்மை அழைக்கின்றன.

 

கிறிஸ்தவர்கள் என்னும் மகிமை மிக்க நாமத்தை தாங்கியுள்ள நாம்,  நமது கிறிஸ்தவ நம்பிக்கை,  சாட்சிய வாழ்வை எப்படி வாழுகின்றோம் என்பதை ஆய்வு செய்து,  உறுதியான நம்பிக்கையோடும்,  துணிவுமிக்க இறைப்பற்றுறதியோடும் வாழ அருள் வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்.

 

மக்கபேயர் இரண்டாம் நூலிருந்து வாசகம்  7:1-2, 9-14

 

அந்நாள்களில்

 

சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

 

அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், “நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதைவிட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்” என்றார்.

 

தாம் இறுதி மூச்சு விடும் வேளையில்,  “நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; எனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே” என்று கூறினார்.

 

அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்;  “நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்” என்று பெருமிதத்தோடு கூறினார். அவர் தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டு வியந்தார்கள்.

 

அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். அவர் இறக்கும் தறுவாயில்,  “கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வு பெற உயிர்த்தெழ மாட்டாய்” என்றார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல் திபா 17:1. 5-6. 8,15

 

பல்லவி: விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.

 

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
பல்லவி

 

என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில்,  நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.
பல்லவி

 

உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவாராக!

 

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம்; திருமுகத்திலிருந்து வாசகம் 2:16-3:5

 

சகோதரர் சகோதரிகளே,

 

நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!

 

சகோதர சகோதரிகளே, இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ் பெறவும், தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்; ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி,  தீயோனிடமிருந்து காத்தருள்வார். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்; இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார். கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  திவெ 1:5-6

 

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

 இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:27-38

 

அக்காலத்தில்

 

உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்து போனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம்  சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.

 

அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.

 

அதற்கு இயேசு சதுசேயரிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

 

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

மன்றாட்டுக்கள்

 

1. நல்லதையே சொல்லவும் செய்யவும் எங்களை உறுதிப்படுத்தும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரையும் உமது கண்ணின் மணியெனக் காத்து, உம்முடைய சிறகுகளின் நிழலில் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்கள் நேர்மையில் நிலைத்திருந்து தமது பணியிலும், வாழ்விலும், தாம் வழிநடாத்தும் மக்களிலும் உமது அருட் பிரசன்னத்தைக் கண்டு நிறைவு பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. வியத்தகு ஆலோசனையாளரான தந்தையே இறைவா! உமது வார்த்தையை நாங்கள் மிகுந்த ஞானத்தோடும், ஆற்றலோடும், உற்சாகத்தோடும் கற்றுக்கொண்டும், அதனைச் சரியான முறையில் புரிந்து கொண்டும் செயற்படுவதற்கு வேண்டிய சக்தியைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. எம் வேண்டுதலை உற்றுக் கேட்கும் தந்தையே இறைவா! இன்று உலகில் அமைதி, விடுதலை, உரிமை வாழ்வு, உடல் நலம், மகிழ்ச்சி போன்றவற்றிற்காக ஏக்கத்தோடு காத்திருக்கும் அனைவருக்கும் ஆறுதல் அளித்து. அவர்கள்  பக்கம் உம் செவியைத் திருப்பி அவர்களின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கின்ற தந்தையே இறைவா! பல்வேறு குடும்பப் பிரச்சனைகள் காரணமாக பிரிவினைகளோடும், வேதனைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்துக் குடும்பங்களையும் உமது ஆசீரால் அவர்களையும் துன்பவியல் வாழ்க்கையிலிருந்து மீட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.