Solemnity of the Nativity of Our Lord

கிறிஸ்து பிறப்பு பெருவிழா (இரவில் திருப்பலி)

2022.12.24

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் வந்திருக்கும் அனைவரையும் அன்புடன் திருப்பலிக்கு வரவேற்கின்றோம். இயேசுவின் பிறப்பு மனிதர்களுக்கு சிறப்பையும்,  எண்ணிறைந்த ஆசீர்வாதங்களையும் தருகின்றது. இன்றைய இறைவார்த்தைகள் மனித வாழ்வுக்கான புதிய நம்பிக்கையையும்,  நமது ஏக்கங்களுக்கு முடிவு உண்டு என்னும் உறுதியான செய்தியையும் தருகின்றன.

 

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகிய மீட்பர் இயேசுவின் பிறப்பு விழா கொண்டுவரும் மகிழ்ச்சியை நமதாக்கிக் கொள்ள,  இறைவார்த்தை நமக்குச் சொல்வதுபோல் நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் வாழ முயற்சி செய்வோம். அதற்கான வலிமையை இப்பலியில் இறைவனிடம் கேட்பதோடு நம் குடும்பங்களிலும் சமூகத்திலும் உலகிலும் அமைதியும்,  மகிழ்வும் நிறைய அருள் வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் மன்றாடிச் செபிப்போம்.

 

முதல் வாசகம்

 

ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.

 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4, 6-7

 

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.

 

ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்     திபா 96: 1-3, 11-13

 

பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.

 

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;  அவர் பெயரை வாழ்த்துங்கள்.
பல்லவி

 

அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
பல்லவி

 

விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.
பல்லவி

 

ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.

 

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்  2: 11 -14

 

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

 

ஆண்டவரின்  அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 2:10-11

 

அல்லேலூயா,  அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார்.அல்லேலூயா

 

நற்செய்தி வாசகம்

 

இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14

 

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும்  தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.

 

உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. வியத்தகு ஆலோசகரும்,  வலிமைமிகு இறைவனுமாகிய தந்தையே! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவருக்கும் நீரே வலிமையாகவும்,  ஆலோசனையாளராகவும் இருந்தருளும். ஆன்மிகத்திற்கும், அருள்வாழ்வுக்கும், எதிராக எழும் எல்லாத் தீமைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய ஞானத்தையும், வலிமையையும் அவர்களுக்கு அளித்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. காரிருளில் இருப்போருக்கு பேரொளியைக் காட்டும் தந்தையே! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள்,  இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும்  இம்மையில், அமைதியின் தூதர்களாக வாழவும், செயற்படவும் தேவையான அருளாசீரை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. மக்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறியும் தந்தையே! உலக நாடுகள் அனைத்திலும் உண்மைக்காகவும், நீதிக்காகவும், விடுதலைக்காகவும், உரிமை வாழ்வுக்காகவும், அன்புக்காகவும் தாகித்து நிற்கும் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்களின் குறைகளைப் போக்கி நிறைவு செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அரும்பெரும் செயல்கள் புரியும்  தந்தையே இறைவா! நீர் எமக்கு கொடுத்துள்ள எல்லா வளங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். எமது அன்றாட வாழ்வில் தேவையற்ற ஆடம்பரங்களில் எமது உழைப்பையும் வளத்தையும் விரயமாக்காது பொறுப்புணர்வோடு அவைகளைப் பயன்படுத்துவதற்கும்,  ஏழைகளோடு அவற்றைப் பகிர்ந்து வாழ்வதற்கும் வேன்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

5. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே! இன்று இத்திருப்பலியில் பங்கு கொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர்,  சிறைகளிலும், தனிமையிலும்  வாடுவோர், குடும்ப பிரிவுத் துயருக்குள்ளாகியிருப்போர் அகதிமுகாம்களில் இருப்போர்,  அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.