Thanksgiving mass

வருட இறுதி நன்றித் திருப்பலி

2022.12.31

 

முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நாம் மன்றாடிய நாளில் நமக்குச் செவிசாய்க்கும் இறைவனின் திருப்பெயரால் நல் வாழ்த்துகள் கூறி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இன்று நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம்.

 

இவ்வாண்டு முழுவதும் நன்மைகளால் நம்மை நிரப்பி நம்மைக் காத்து வந்த இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். இந்த நன்றியின் நாளிலே,  திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுவோம். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். இறைவார்த்தையின் வழியில் மென்மேலும் பயணம் தொடரும் உள்மன உறுதியோடு இத்திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம்.

 

மன்றாட்டுக்கள்

1. தந்தையே,  விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே இறைவா! எம் திருத்தந்தை,  ஆயர்கள்,  குருக்கள்,  துறவிகள், அனைவரும் பரிவு,  இரக்கம்,  நல்லெண்ணம்,  மனத்தாழ்மை,  கனிவு,  பொறுமை,  ஆகிய பண்புகளால் தங்களை அணி செய்து, உமக்கு நன்றி செலுத்தி வாழும் மனப்பக்குவத்தை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. அரும் பெரும் செயல்களால் எம்மை மகிழ்விக்கும் தந்தையே இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் நன்றியுள்ளவர் களாயிருந்து,  கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை எங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்ள வைத்து நன்றியோடு உம்மைப் போற்றிப் புகழும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. வல்லவரான தந்தையே இறைவா! பிறக்கவிருக்கும் புதிய ஆண்டை அமைதியும்,  மகிழ்வும்,  பாதுகாப்பும்,  அருளும் நிறைந்த ஓர் ஆண்டாக எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! நோய்,  பயம்,  வறுமை,  வேலையின்மை,  பாதுகாப்பின்மை ஆகியவற்றால் கண்ணீரோடு வாழும் அனைத்து மக்கள் மீதும் மனமிரங்கி அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.