கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா (22 ஜூன் 2025)
திருப்பலி முன்னுரை
இன்று இயேசுவினால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் பெருவிழா. இயேசுவின் திருவுடல், திரு இரத்தப்பெருவிழா. நற்கருணையிலிருந்து ஆன்மாவிற்கு சக்தியையும், இயேசுவின் திரு இரத்தத்திலிருந்து ஆன்மாவிற்கு தூய்மையையும் பெற்றுக்கொள்ள திருஅவை எம்மை அழைத்துநிற்கின்றது.
உன்னத கடவுளின் அர்ச்சகராகவிருந்த மெல்கிசெதேக்கு போரில் வெற்றி பெற்று திரும்பிவந்த ஆபிராமுக்கு அப்பத்தையும், இரசத்தையும் அளித்து ஆசிர்வதித்த நிகழ்வை எடுத்துக்கூறுகின்றது முதல் வாசகம். நற்கருணைப்பெருவிருந்தை ஆண்டவர் இயேசு நிறுவிய முறையையும், அதனை உண்ணும் நாம் இயேசுவின் சாவை அறிவிக்கும் கடமையையும் புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் விளக்குகின்றார். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு உணவாக அளித்த இயேசுவின் அருளடையாளத்தை லூக்கா நற்செய்தியில் வாசிக்க கேட்போம்.
நற்கருணை ஒன்றிப்பின், ஒருமைப்பாட்டின் திருவருட்சாதனம். நற்கருணையை அன்பின், தியாகத்தின், பகிர்வின் அடையாளமாகவும், நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இயேசுக்கிறிஸ்து நமக்கு அளித்துள்ளார் என்பதை மனதில் இருத்தியவர்களாக இறையுறவில் நாமும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்க அருள்தர வேண்டி திருப்பலிக்கொண்டாண்டாட்டத்தில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 14: 18-20
அந்நாள்களில்
சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘ உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!” என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a)
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
1ஆண்டவர் என் தலைவரிடம், ‘நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப் பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். – பல்லவி
2வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! – பல்லவி
3நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். – பல்லவி
4‘மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். – பல்லவி
இரண்டாம் வாசகம்
நீங்கள் உண்டு பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26
சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.
ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 51-52
அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அனைவரும் வயிறார உண்டனர்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 11b-17
அக்காலத்தில்
இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்” என்றார்கள்.
ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, “இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்” என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.
அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்
- மெல்கிசேதேக்கின் வழியில் பகிர்ந்திடத் தூண்டும் இறைவா! திருஅவையின் திருப்பணியாளர்கள் அனைவரும் பகிர்தலின் மேன்மையை அவர்களது முன்மாதிரிகையான வாழ்வினால் சான்று பகரவும், எமக்கு எடுத்துரைக்கவும் அவர்களது பணிவாழ்வை ஆசீர்வதித்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நற்கருணை நாதனே! உம்மை என் ஆன்மாவில் ஏற்றிட தடையாயிருக்கும் என் பாவங்ளை மன்னியும். நற்கருணை உட்கொள்வதன் வழியாக இயேசுவும் நானும் என்ற இறையனுபவத்தை நாம் அனுபவபூர்வமாகப் பெற்று அவரை பிறருக்கு அறிமுகப்படுத்த வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- திருமுழுக்கின் வழியாக பொதுக்குருத்துவத்தில் பங்குகொள்ளும் நாம் நீர் எமக்களித்த ஆசிகள், வளங்களை பிறரோடு பகிர்ந்து வாழும் நல்லிதயத்தை எமக்கருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- புலம்பெயர்ந்து வாழும் எம் பிள்ளைகள் இந்நாட்டில் பாடசாலைகளில் நிறம், இனம், மொழி போன்ற காரணங்களினால் தமது திறமைகள், ஆற்றல்களை வெளிப்படுத்த முடியாமல் மனஅழுத்தத்தினால் தனிமைப்படுத்தப்பட்டு துன்புறுகிறார்கள். நற்கருணை சந்திப்பின் வழியாக கடவுளின் உடனிருப்பை உணர்ந்து கொள்ளவும், அவர்களது இலக்கை அடையவும் நீரே அவர்களை நல்வழியில் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.