திருவருகைக்காலம் 1ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இன்று திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கநாளாகும். திருவருகைக்காலத்தின் 1ம் ஞாயிறாகிய இன்று இறைவன் எமக்கருளிய இவ்வாழ்வினை முழுமையாக வாழ்வதன் மூலமாக இறைமகன் இயேசுவின் வருகைக்காக நம்மையே நாம் ஆயத்தம் செய்ய தாய்த்திருச்சபை எம்மை அழைக்கின்றாள்.
பபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ராயேல் மக்கள் தம் குற்றங்களுக்காக மனம் வருந்தி, இறையன்பை நினைத்து இறைவனிடம் வேண்டுவதை முதல் இறைவாக்கில் எசாயா இறைவாக்கினர் எடுத்துக்காட்டுவதையும், இரண்டாம் இறைவாக்கில் புனித பவுல் இறைவன் செய்த நன்மைக்கு நன்றி கூறுவதுடன், செய்யவிருக்கும் நன்மைகளுக்காக பொறுமையுடன் காத்திருக்க கொரிந்தியரை அழைப்பதையும், மாற்கு நற்செய்தியில் இயேசு தனது இரண்டாம் வருகைக்காக எந்நேரமும் மனம் தளராது, விழிப்புடன் காத்திருக்க வேண்டும் என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துவதையும் வாசிக்க கேட்போம்.
இன்றைய வாசகங்கள் வழியாக எதிர்நோக்குடன், விழிப்புடன் பொறுமையாக காத்திருந்து இயேசுக்கிறிஸ்து தரும் மகிழ்ச்சியான கிறிஸ்தவ வாழ்வை வாழ எமக்கு வழிகாட்டிட வேண்டி தொடரும் திருப்பலியில் பங்குகொள்வோம்.
முதல் வாசகம்
நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16-17; 64: 1,3-8
ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து `எம் மீட்பர்’ என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வது ஏன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியது ஏன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதும் இல்லை. கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர். இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன. உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 80: 1ac,2b. 14-15. 17-18
பல்லவி:கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
1ac இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! – பல்லவி
14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! – பல்லவி
17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். – பல்லவி
இரண்டாம் வாசகம்
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படவேண்டும் எனக் காத்திருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9
சகோதரர் சகோதரிகளே, நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37
அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர் தம் வீட்டை விட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாய் இருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.”
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
- திரு அவையின் ஞான வழிகாட்டிகள் அனைவரும் உம் திருமகனின் அருளினால் திருஅவையினை சாட்சிய வாழ்வுக்கு இட்டுச்செல்ல ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
- எமதாயனே! எம்முடன் கூடி வாழும் வயோதிபர், மாற்றுத்திறனாளிகள் மட்டில் அன்புகொண்டு பகிர்தல் மூலமாக விண்ணரசின் நற்செய்தியை அவர்கள் அறிந்திட ஆண்டபவரே உம்மை மன்றாடுகின்றோம்.
- படைகளின் கடவுளே! எம் சமூக வாழ்வியலில் பகைமை, பொறாமை, ஆணவம் என நாம் செய்த பல பாவங்களிலிருந்து எம்மை மன்னித்து மீட்குமாறு உம் முக ஒளியை எமக்கு காட்டிட இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
- வழிநடத்தும் இறைவா! “இயேசுவும் நானும்” என்ற இறையனுபவத்தைப்பெற்றிட நாம் அன்றாட விவிலிய வாசிப்பினை பழக்கப்படுத்தி வாழ தயைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.