தூய ஆவி பெருவிழா

தூய ஆவி பெருவிழா (19 மே 2024)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் அனைவரும் ஒரே திருச்சபையாக பெந்தக்கோஸ்தே எனும் தூய ஆவியானவரின் பெருவிழாவை கொண்டாடுகின்றோம். இன்றுதான் நம் கத்தோலிக்க திருச்சபை பிறந்த நாள். இந்த நாளிலே தான் சீடர்கள் மீது தூய ஆவியின் வருகையும், ஆவியின் அருட்பொழிவும் நடைபெற்றது.

திருத்தூதர் பணியிலிருந்து எடுக்கப்பட்ட முதல் இறைவாக்கில் தூய ஆவியின் வருகைபற்றியும், தூய ஆவியின் பல்வேறு அடையாளங்கள், செயற்பாடுகள், கொடைகள் பற்றியும் கூறப்படுகின்றது. இரண்டாம் வாசகத்தில் தூய ஆவியின் கொடைகளைப்பெற்ற கொருந்து திருச்சபையை  ஒற்றுமையாக வாழ புனித பவுல் அழைக்கின்றார். யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடருக்கு ‘தூய ஆவியைப்பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறி சமாதானம், பாவ மன்னிப்பு  ஆகிய இரண்டு கொடைகளையும் கொடுக்கின்றார்.

தூய ஆவிக்கு பெருவிழா எடுக்கும் இன்று நாம், தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு அவர் குரலுக்கு இனிவரும் காலங்களிலும் செவிசாய்த்து> அவரால் தொடர்ந்து வழிநடத்தப்படுகின்ற இறை சமுகமாக வாழ்ந்திட வரம் வேண்டி பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.

அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!” என்றனர்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 104: 1 ab,24 ac. 29 bc-30. 31,34 (பல்லவி: 30)

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

1 ab என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! 24 ac ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. – பல்லவி

29 bc நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். – பல்லவி

31ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! 34என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். – பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய ஆவியின் கனிகள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-25

சகோதரர் சகோதரிகளே,

நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.

ஆனால் தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தூய ஆவியார் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26-27; 16: 12-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

நான் உங்களிடம் சொல்லவேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.”

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. தூய ஆவியை அனுப்பி திருச்சபைக்கு உருக்கொடுத்த இறைவா! திருச்சபையின் ஞானமேய்ப்பர்கள் அனைவரும் நிறையுண்மையின் ஆவியினால் வழிநடத்தப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை விசுவாசத்தில் வளர்த்தெடுக்க ஆர்வமுடன் உழைப்பதற்கு தேவையான அருளை பொழிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. திருமுழுக்கின் மூலம் நம்மிடையே பிரசன்னமாயிருக்கும் தூய ஆவியாரின் துணையுடன் கிறிஸ்தவ அன்பிய வாழ்வு வாழ்து விண்ணேற்பை நாமும் அடைந்திட வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. உலகம் முழுவதும் உமது மறைபப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தாம் எதிர்கொள்ளுகின்ற அன்றாட துன்பங்கள் வேதனைகள், சித்திரவதைகள் மத்தியிலும் உமது அருளிலும், இறைபராமரிப்பிலும் நம்பிக்கை வைத்து உம் பணியை இறுதி வரை முன்னெடுத்துச்செல்ல அவர்களை திடப்படுத்தியருவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. குடும்பங்களில் பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையே உள்ள இணைப்பு தூய ஆவியால் வலுப்பெற்று தூய ஆவியின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஒற்றுமை ஒவ்வொரு குடும்பத்தையும் ஆண்கொண்டிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.