தூய ஆவி  பெருவிழா

தூய ஆவி  பெருவிழா ஞாயிறு (08 ஜூன் 2025)

திருப்பலி முன்னுரை

இன்று பெந்தக்கோஸ்தே திருவிழாவைக் கொண்டாட ஒன்றுகூடியுள்ளோம். தொடக்கத்தில் நீரில் அசைவாடிய ஆவி, அன்னை மரியாவை ஆட்கொண்ட ஆவி, இயேசுவின் வாழ்வில் நிறைந்திருந்த ஆவி திரு அவையில் பொழியப்பட்ட நாளே பெந்தக்கோஸ்து பெருவிழா. பழைய இயல்புகளை களைந்து, புதிய மக்களாக மாற தூய ஆவியின் துணை என்றும் அவசியமானது.

இன்றைய முதல் வாசகம் அன்னை மரியா மேலும், திருத்தூதர்கள் மீதும் தூய ஆவி இறங்கிவந்த நிகழ்வையும், இரண்டாம் வாசகம் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள் பெறுகின்ற இறைவல்லமையைப் பற்றி புனித பவுல் கூறுவதையும், நற்செய்தியில் தூயஆவியை கொடையாக பெற்றுக்கொண்டு தம் அன்புக்கட்டளைப்படி நடக்க இயேசு திருத்தூதர்களுக்கு கூறுவதையும் வாசிக்க கேட்போம்.

எல்லோரையும் ஏற்று, அன்பு செய்து, ஒன்றித்து வாழ தூய ஆவியே எமக்கு துணையாக வாரும். திருமுழுக்கின் வழியாக இறைவனை “அப்பா தந்தையே” என்று அழைக்கும் உரிமையை பெற்ற நாம் அவரின் அன்புப்பிள்ளைகளாக என்றும் வாழ தூய ஆவியார் தம்முடைய வல்லமையாலும், ஞானத்தாலும், ஆற்றலினாலும் எம்மை வழிநடத்த அருள்வேண்டி தொடரும் திருப்பலியில் செபிப்போம். 

முதல் வாசகம்

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.

அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!” என்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

பதிலுரைப் பாடல்

திபா 104: 1ab,24ac. 29bc-30. 31,34 (பல்லவி: 30)

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

1abஎன் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!24acஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. – பல்லவி

29bcநீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.30உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.– பல்லவி

31ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!34என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 8-17

சகோதரர் சகோதரிகளே,

ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

ஆகையால் சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.

கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெறவேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-16, 23-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்

  1. பெந்தக்கோஸ்தே பெருவிழாவில் தனது பிறந்த நாளைக்கொண்டாடும் உமது திருஅவையையும், அதன் திருப்பணியாளர்களையும், பொதுநிலையினரையும் உடல், உள, ஆன்ம வாழ்வில் காத்து வழிநடத்தவும், தூய ஆவியின் கொடைகளையும், கனிகளையும் இவர்கள் வழியாக உலக மக்கள் அனைவருக்கும் தந்திடவும் வேண்டுமன்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. திரு அவை ஆண்டவர் வரும் நாள் வரை நம்பிக்கையின் ஒருமைப்பாட்டிலும், பரம அன்பின் ஒன்றிப்பிலும் நிலைத்து நின்று உலகெங்கும் பரவி, வளர்ச்சி பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. உலக இன்பங்களே நிலையானது என்று வாழும் எம் பிள்ளைகள் கிறிஸ்துவின் நற்செய்திப்பணியில் தம்மை ஈடுபடுத்திட தூய ஆவியார் தேவ அழைத்தலை அவர்களுக்கு தூண்ட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. குடும்பங்களில் பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையில் உள்ள உறவு தூய ஆவியால் வலுப்பெற்று தூய ஆவியின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஒற்றுமை ஒவ்வொரு குடும்பத்தையும் ஆட்கொண்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.