பாஸ்கா காலம் 6ஆம் ஞாயிறு

பாஸ்கா 6ஆம் ஞாயிறு(25 மே 2025)

திருப்பலி முன்னுரை 

இன்று பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறாகும். கடவுள் தம் மகன் கிறிஸ்து வழியாக, நிலையான அமைதியை எமக்கருளுகின்றார். அது நம்மை மகிழ்வான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

தூய ஆவியின் தூண்டுதலால் திருச்சபையின் மக்கள் கடைப்பிடிக்கவேண்டிய புதிய விதிமுறைகள் பற்றி திருத்தூதர்கள் நீதியான, சரியான முடிவுகளை எடுத்து அமைதியை நிலைநாட்டுவதை முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.  இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் தனது காட்சியில் திருச்சபையாகிய விண்ணக எருசலேமையும் அதில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும், ஆட்டுக்குட்டியான இயேசுக்கிறிஸ்துவும் கோவிலாக வீற்றிருப்பதையும் காண்கின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தாம் தந்தை கடவுளிடம் செல்லவிருப்பதையும், தூய ஆவியார் துணையாக வரவிருப்பதையும் கூறி, “ நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம், மருளவேண்டாம் ” என்று கூறி அமைதியை அளிக்கின்றார்.

இயேசுக்கிறிஸ்து தந்த அமைதியை எமது குடும்பத்தவருடன், அயலவர்களுடன் எமது எண்ணம், சொல், செயல் அனைத்திலும் வெளிப்படுத்தி வாழ  எம் இதயங்களை கனிவாக்கிட தூய ஆவியின் துணையை கேட்டு, பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசகம்

இன்றியமையாதவை தவிர, வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-2, 22-29

அந்நாள்களில்

யூதேயாவிலிருந்து வந்த சிலர், “நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது” என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.

அக்கடிதத்தில், “திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

இன்றியமையாதவற்றைத் தவிர, அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்” என்று எழுதியிருந்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!

1கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!2அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். – பல்லவி

4வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். – பல்லவி

5கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!7கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! – பல்லவி

இரண்டாம் வாசகம்

திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 10-14, 22-23

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 23-29

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பது இல்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.

உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்

  1. அன்பான இறைவா! திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் அன்பு, ஒற்றுமை, அமைதி, இரக்கத்தை தங்கள் சொல்லாலும், செயலாலும் இவ்வுலகிற்கு அளித்திடவும், அவர்கள் உடல், உள, ஆன்ம நலனோடு வாழவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பான இறைவா! துன்ப துயரம், பயம், விலையுயர்வு, போர், இயற்கையனர்த்தம் இவ்வாறாக நாளுக்கு நாள் இப்பூமியின் நிலைகள் மாறிக்கொண்டிருக்கின்றது. நாட்டுத்தலைவர்கள் உலகெங்கும் அமைதியும், பாதுகாப்பும், வளமான வாழ்வும் நிலைபெறுமாறு அவர்கள் எடுக்கும் முடிவுகள் அமைந்திட எங்கள் தலைவர்களை உம்முடைய ஞானத்தால் நிரப்பி வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அன்பான இறைவா! புலம்பெயர்ந்து வாழும் அனைத்து குடும்பங்களையும் உமது அன்பின் கரங்களில் ஒப்படைத்து வேண்டுகின்றோம். எங்கள் குடும்பங்கள் திருக்குடும்பத்தைப்போல் ஒன்றிணைந்த மனத்துடன் வாழ்ந்து, அன்பும், அமைதியும், பகிர்தலும்,  ஒருவருக்கொருவர் உதவும் பண்பும் கொண்டவர்களாக இறையுறவில் வளர வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. சமத்துவத்தின் சங்கமமே இறைவா! உலக மக்கள் யாவரும் செய்யும் தொழிலால், பேசும் மொழியால், சேர்த்துள்ள செல்வத்தால் பிறப்பால், வளர்ப்பால், உயர்வு – தாழ்வு பார்க்கும் நிலையில் உள்ளனர். எங்கள் மனங்களில் அண்டியுள்ள ஏற்றத்தாழ்வு அழுக்குகள் அகன்று அனைவரும் சமம் என்ற உணர்வுடன் சமத்துவத்திற்காக உழைக்க அருள்வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.