பாஸ்கா 2ஆம் ஞாயிறு (27 ஏப்ரல் 2025)
திருப்பலி முன்னுரை
பாஸ்கா காலத்தின் 2ம் ஞாயிறாகிய இன்று இறைஇரக்கத்திருவிழாவாகும். சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவர் இயேசு தம் இதயத்தின் வழியாக கடைசி சொட்டு இரத்தத்தையும், தண்ணீரையும் எமக்காக தருமளவிற்கு இறைவன் நம்மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து, இறையிரக்கத்திருவிழாவை கொண்டாட தாய்த்திருச்சபை எம்மை அழைத்து நிற்கின்றது.
முதல் வாசகத்தில் பேதுருவின் நிழல் பட்டாலேயே மக்கள் குணம்பெற்றார்கள் என்று திருத்தூதர்பணி நூலின் எழுத்தாளர் புனித லூக்கா பதிவுசெய்துள்ளார். இரண்டாம் வாசகம் மானிடமகளின் மாட்சியைப் பற்றிய திருத்தூதர் யோவானின் சான்றை எடுத்துரைக்கின்றது. யோவான் நற்செய்தி தோமாவின் விருப்பத்தை புரிந்து இரக்கத்துடனே ஆண்டவர் தம் காயங்களைக் காட்டி நம்ப அழைத்த போது “என் ஆண்டவரே! என் தேவனே” என்று தமது ஆழமான இறைநம்பிக்கையை திருத்தூதர் தோமா வெளிப்படுத்தியதை எடுத்துரைக்கின்றது.
“உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று எம்மை பார்த்து கூறும் உயிர்த்த இயேசு எமது இறைவிசுவாசத்தை ஆழப்படுத்த இறைவார்த்தை, நற்கருணை ஆகிய இரண்டு வழிகளை எமக்களித்துள்ளார். இறைவார்த்தை மூலம் இறைவனைத் தியானிக்கவும், நற்கருணை மூலம் இறைவனின் உடனிருப்பை உணரவும் வரம்வேண்டி இறையிரக்க திருப்பலிக் கொண்டாட்டத்தில் பக்தியோடு பங்கெடுப்போம்.
முதல் வாசகம்
ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்டவரின் கூட்டம் வளர்ந்துள்ளது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 12-16
அந்நாள்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடிவந்தனர். மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்.
ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல் நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல் நலமற்றோரையும் தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
பதிலுரைப் பாடல்
திபா 118: 2-4. 22-24. 25-27a (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!3‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!4‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. – பல்லவி
22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். – பல்லவி
25ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.27aஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். – பல்லவி
இரண்டாம் வாசகம்
சாவுக்கு உட்பட்டேனாயினும், இதோ நான் என்றென்றும் வாழ்கிறேன்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 9-11a, 12-13, 17-19
உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்கு கொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும் குரல் ஒன்று எக்காளம் போல முழங்கக் கேட்டேன். “நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை” என்று அக்குரல் கூறியது.
என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத் தண்டுகளைக் கண்டேன். அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்.
நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என் மீது வைத்துச் சொன்னது: “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழ இருப்பவற்றையும் எழுதிவை.”
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 20: 29
அல்லேலூயா, அல்லேலூயா! “தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்வோர் பேறுபெற்றோர்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.
எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்
- இரக்கமுள்ள தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள், பொதுநிலையினர் அனைவரும் இறைவார்த்தை, நற்கருணை ஆகியவற்றால் வலிமையடைந்து உமது இரக்கத்தையும், இறையன்பையும் இவ்வுலகில் மறைபரப்ப வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று வாழ்த்திய இறைவா! மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் நீர் விட்டுச்சென்ற மன்னிப்பு, நம்பிக்கை இவையிரண்டுமே அவசியமானது என்பதை புரிந்துகொண்டோம். எம் எண்ணம், சொல், செயல்கள் அனைத்திலும் நீர் விட்டுச்சென்ற மன்னிப்பு, நம்பிக்கை இவ்விரண்டையும் கடைப்பிடிக்கவும், குடும்பத்தில் நிறைவான மகிழ்ச்சியும், நிலையான அமைதியும் என்றும் நிலைத்திருக்கவும் அருள்தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இறையிரக்கத்தின் ஊற்றாகிய இறைவா! இயேசுவின் உயிர்ப்புக்கு முதல் சாட்சியாக பெண்களைத் தேர்ந்தெடுத்தீர். மருத்துவர், தாதியர், ஆசிரியர், மறைபரப்பாளர் என பல்வேறுபட்ட பொதுப்பணிகளில் நற்பணிபுரிந்துகொண்டு, குடும்பத்தை பராமரிக்கும் பெண்கள், ஆண்கள் இருபாலாரையும் உம் அளவு கடந்த இறையிரக்கத்தினாலும், அருளினாலும் பலப்படுத்தி, அவர்களது பணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நற்செய்தியை பறைசாற்ற திருத்தூதர்களுக்கு உம் வல்லமையை அளித்த இறைவா! திருத்தூதர்களைப் பின்பற்றி மறைபரப்புப்பணிக்காக வெவ்வேறு நாடுகளில், பணிபுரியும் அருட்பணியாளர்களை ஆசீர்வதியும். நம்பிக்கையோடு ஆன்மிகத்தில் இறைமக்களை வளர்த்தெடுக்க இவர்களுக்கு உடல், உள, ஆன்ம வல்லமையை அளித்து, பாதுகாத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.