பொதுக்காலம் 10ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 10ஆம்  ஞாயிறு (09 ஜூன் 2024)

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக்காலத்தின் 10ம் ஞாயிறாகும். வாழ்வின் இன்ப துன்ப வேளைகளில் அன்னை மரியாளைப்போன்று இறைசித்தத்ததிற்கு கீழ்ப்படிந்து வாழ தாய்த்திருச்சபை இன்றைய வாசகங்கள் வழியாக எம்மை அழைக்கின்றது.

முதல் இறைவாக்கில் ஆதிப்பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறியதுடன் தமது தவறை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதையும், இரண்டாம் இறைவாக்கில் இரண்டாம் வருகையின் போது இயேசுவின் மகிமையில் நாமும் உயிர்த்தெழுவோம் என பவுல் கொருந்தியருக்கு கூறுவதையும், நற்செய்தியில் தவறான செய்திகள் மூலம் தம் பெயரைக்கொடுப்பவர்களை சரியான மனப்பக்குவத்துடன் இயேசு அணுகுவதையும் வாசிக்க கேட்போம்.

திருமுழுக்கின் வழியாக எமக்கு கிடைத்த நற்செய்திப்பணியை உதாசீனப்படுத்தியமைக்காகவும், பிறரது பணிவாழ்வை ஏளனப்படுத்தியமைக்காகவும் மனம் வருந்துவோம். எமது கிறிஸ்தவ வாழ்விற்கெதிரான சோதனைகளை வென்று இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்து வாழ இயேசுவின் துணையை வேண்டி தொடரும் திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம்

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.

“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக் கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.

ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.

ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 130: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 7)

பல்லவி: பேரன்பும் மீட்பும் ஆண்டவரிடமே உள்ளன.

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். – பல்லவி
3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். – பல்லவி
5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. – பல்லவி
7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரி டமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! – பல்லவி

இரண்டாம் வாசகம்

நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13- 5: 1

சகோதரர் சகோதரிகளே,

“நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார். எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பெற்று வருகிறது.

எனவே நாங்கள் மனம் தளருவதில்லை. நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கின்றன. அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். நாங்கள் காண்பவற்றையல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.

நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 12: 31 b-32

அல்லேலூயா, அல்லேலூயா! ”இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-35

அக்காலத்தில்

இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக் கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” ‘இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. அன்பின் இறைவா! திருச்சபையின் திருப்பணியாளார்கள் அனைவரும் உம்மையே பற்றிக்கொண்டு, தாமும் உம்வழி சென்று, இறைமக்களை உம் பாதை நோக்கி வழிநடத்த வரம் தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பின் இறைவா! திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் இன்பத்திலும், துன்பத்திலும் ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொண்டு, ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. ஒளியாம் இறைவா! நாம் அனைவரும் தூய பவுலின் அறிவுரையை பின்பற்றி காலத்தின் அறிகுறிகளை நன்கு கற்றுணர்ந்து, இருள்செயல்களை கைவிட்டு, ஒளியின் மக்களாக திகழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அருளின் ஊற்றே இறைவா! பெற்றோர் பிள்ளைகள் நன்றியோடு கூடிய இறைவேண்டல், இறைவார்த்தையை வாசித்தல், திருச்செபமாலை சொல்லுதல் ஆகியவற்றின் வழியாக உமதன்பை சுவைத்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.