பொதுக்காலம் 2ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இன்று பொதுக்காலத்தின் 2ம் ஞாயிறாகும். இன்றைய வாசகங்களினூடாக அழைக்கும் இறைவனின் குரலுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றது.
அழைத்த இறைவனின் குரலுக்கு செவிசாய்த்த சாமுவேல் இறைவனின் ஊழியனாவதை இன்றைய முதல் வாசகத்திலும், புனித பவுல் கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு சான்றுபகரும் முகமாக ஒழுக்கத்தோடு வாழுமாறு கொருந்து நகர் மக்களுக்கு வலியுறுத்துவதையும், யோவான் நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் தமது சீடர்களிடம் இயேசுவைப் பின்பற்றும்படி கூறியதும் அச்சீடர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வதையும் வாசிக்க கேட்போம்.
உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் இயற்கைவளமும், மனித உழைப்பும் இணைந்து இறைகருணையால் தமக்கு கிடைத்த அனைத்து கொடைகளுக்கும் நன்றி செலுத்தும் நாளே பொங்கல் திருவிழாவாகும். நாம் வாழ்கின்ற கிறிஸ்தவ வாழ்வு இறைவனின் அழைப்பு என்பதை உணர்ந்தவர்களாக இதுவரை இறைவன் எமக்களித்த அனைத்துக்கும் நன்றி கூறிக்கொண்டு, இயேசுவைப் பின்தொடர்ந்து சாட்சிய வாழ்வு வாழ வரம் கேட்டு தொடரும் திருப்பலியில் பங்குகொள்வோம்.
முதல் வாசகம்
‘ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன்’
இறைவாக்கினர் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் (1சாமு.3:3-10,19)
அந்நாள்களில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது ஆண்டவர், ‘சாமுவேல்’ என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்” என்றார். அவனும் சென்று படுத்துக்கொண்டான். ஆண்டவர் மீண்டும் ‘சாமுவேல்’ என்று அழைக்க, அவன் எழுந்து ஏலியிடம் சென்று, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அவரோ, “நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக் கொள்” என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர், ‘சாமுவேல்’ என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்து கொண்டார். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, “சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தன் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான். அப்போது ஆண்டவர் வந்து நின்று, ‘சாமுவேல், சாமுவேல்’ என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், ‘பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று மறுமொழி கூறினான். சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்கள் 40,2,3,6-9
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின் மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். 3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். – பல்லவி
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7a எனவே, ‘இதோ வருகின்றேன்.’ – பல்லவி
7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். – பல்லவி
9 என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். – பல்லவி
இரண்டாம் வாசகம்
உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
(1 கொரி 6:13-15,17-20)
சகோதர சகோதரிகளே, உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 41, 17b
அல்லேலூயா, அல்லேலூயா! மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
இயேசு தங்கியிருந்த இடத்தைச் சீடர் பார்த்தார்கள்; அவரோடு தங்கினார்கள்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:35-42)
யோவான் தம் சீடர் இருவருடன் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். ‘மெசியா’ என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
- இறைவா! நீர் அழைத்த குரலுக்கு செவிசாய்த்த திருஅவையின் திருப்பணியாளர்கள் தமது சாட்சிய வாழ்வால் உம் மேன்மையை பிறருக்கு அறிவிக்கவேண்டிய உடல்> உள பலத்தை அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- அன்பின் இறைவா! நற்கருணை உட்கொள்வதன் மூலம் கிறிஸ்துவை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்து அவரை பிறருக்கு அறிமுகப்படுத்த வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எல்லா வல்ல தந்தையே! மேலதிகமான உணவின் அத்தியாவசியத்தை உணர்ந்து அதை வீணாக்காது பசியில் வாடுவோருடன் பகிர்ந்து கிறிஸ்துவின் சாட்சியாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நல்ல ஆயனே! பல்லினக்கலாச்சாரங்களுக்குள் வாழும் எமது பிள்ளைகள் தூய ஆவியாரின் வழியாக உமது அழைத்தலின் குரலை அறிந்து தெளிவு பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.