பொதுக்காலம் 29ம் ஞாயிறு

பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு (20 அக்டோபர் 2024)

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக்காலத்தின் 29ம் வாரமாகும். கிறிஸ்துவைப் பின்பற்றி, பிறருக்காக நம்மை அர்ப்பணிக்கக் கூடிய சிறந்த தலைவர்களாக உருவாக நாம் அழைக்கப்படுகின்றோம்.

துன்புறும் ஊழியனாகிய இயேசுவின் பாடுகளை முன்னறிவித்த இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை முதல் வாசகத்திலும், இயேசுவே தனிப்பெரும் தலைமைக்குரு என புனித பவுல் எபிரேயருக்கு கூறிய வார்த்தைகளை இரண்டாம் வாசகத்திலும், இயேசு தம் பாடுகளை மூன்றாம் முறையாக முன்னறிவித்து, தலைமைத்துவத்தின் பண்புகளை அன்புச்சீடர்களுக்கு சுட்டிக்காட்டுவதை மாற்கு நற்செய்தியிலும் வாசிக்க கேட்போம்.

நம் பலவீனங்கள், வலுவின்மைகள், துன்பங்களை அறிந்து எம்முடன் பேச காத்திருக்கும் நற்கருணை நாதரிடம் எம்மை ஒப்படைத்து, அவரது இறையிரக்கத்தையும், அருளையும் வேண்டி தொடரும் கல்வாரிப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம்

தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 53: 10-11

அந்நாள்களில்

ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளர் ஆக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 22)

பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. – பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். – பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! – பல்லவி

இரண்டாம் வாசகம்

அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16

சகோதரர் சகோதரிகளே,

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கை இடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45

அக்காலத்தில்

செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். அவர் அவர்களிடம், “நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர்.

இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம்,

“பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. இறைவா உமது அழைத்தலுக்கு பணிந்த மனத்துடன் தம்மை அர்ப்பணித்த திருஅவையின் திருப்பணியாளர்களுக்கு கடவுளின் பணியாளராக என்றும் பணிபுரிய தேவையான ஆற்றலை கொடுத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. பலவித நோய்களினால்  அவதிப்படும் உம் பிள்ளைகள் உமது உடனிருப்பை உணர்ந்து நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. தினமும் பல்வேறு துன்பங்களோடு அன்னிய தேசத்தில் வாழும் எமக்கு நீரே துணையும் கேடயமுாக இருக்கின்றீர். உமது பேரன்பு தொடர்ந்து எங்கள் மீது இருக்க  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. நற்கருணை உட்கொள்வதன் வழியாக இறையிரக்கத்தை சுவைத்த நாம் அயலவர் மீது இரக்கமும் அன்பும் கொண்டு உதவிகள் செய்து வாழும் மக்களாக எம்மை வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.