பொதுக்காலம் 4ம் ஞாயிறு

பொதுக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக்காலத்தின் 4ம் ஞாயிறாகும். திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட அழைப்பை உணர்ந்தவர்களாக இறைவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து வாழ திருச்சபை எம்மைப்பணிக்கின்றது.

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் மோசேக்கு பின் இஸ்ராயேல் மக்களை வழிநடத்த ஒரு இறைவாக்கினரை தரப்போவதாக கடவுள் மோசேக்கு கூறியவற்றை அவர் தம் மக்களுக்கு அறிவிப்பதையும், இரண்டாம் இறைவாக்கில் திருமண உறவானது இறைஅன்பும், பிறர் அன்பும், சமூக உறவும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென புனித பவுல் கொருந்திய மக்களுக்கு கூறுவதையும்,  மாற்கு நற்செய்தியில் இயேசு கடவுளின் மகன் என்பதை அலகையே சான்று பகர்கின்றதையும் வாசிக்க கேட்போம்.

அன்னை மரியாளை உதாரணமாக கொண்டு இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்து, செபத்தின் வழியாக சோதனைகளை வென்று சிந்தனை, சொல், செயல்களில் தூய்மையைக் கடைப்பிடிக்க அருள்தர வேண்டுமென்று தொடரும் திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம்

ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 18: 15-20

அந்நாள்களில் மோசே மக்களிடம் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, ‘நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக’ என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னை நோக்கி, ‘அவர்கள் சொன்னதெல்லாம் சரி’ என்றார். உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன்.

ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b,7c )

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.

1வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். – பல்லவி
6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! – பல்லவி
8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கன்னிப் பெண் தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 32-35

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப் பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோர் ஆகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.

உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 16

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

ஒருமுறை இயேசுவும் அவர் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்தியது. “வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம் மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங் கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. நல்லாயனே! அதிகாரம் மேலோங்கி நிற்கும் இவ்வுலகில் உம் பணியினைத் தொடரும் திருச்சபையின் திருப்பணியாளர்களை உமது அன்பினால் அரவணைத்து காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. தூய பவுலின் போதனைக்கேற்ப நாம் அனைவரும் மகிழ்வான வேளைகளிலும், துன்பம், வறுமை, சோதனைகளின் போதும் கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வாழ்வு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. திருவிருந்து என்பது விண்ணக விருந்தின் முன்தலை என்பதை உணர்ந்தவர்களாக அன்றாடம் பங்கேற்கும் திருப்பலியில் தகுதியான உள்ளத்தோடு கலந்து கொள்ள வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. எம் சமூகத்தில் அன்றாட வாழ்வின் அடிப்படைத்தேவகைள் மறுக்கப்பட்ட, அன்பின்றி புறக்கணிக்கப்பட்ட, வறுமையினால் ஒதுக்கப்பட்ட உமதன்புப்பிள்ளைகள் ஆறுதலும், மகிழ்வும்பெற்று வாழ அவர்களை ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.