3rd Sunday of Lent

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

2023.03.12

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்த நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் தவக்காலம் மூன்றாம்  ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

பாலைநிலத்தில் இறைவன் தன் மக்களுக்குச் செய்த அற்புதத்தினை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. ஆனால் அம்மக்கள் எவ்வாறு தங்கள் பொறுமையின்மையால் இறைவனை நம்ப மறுத்து அவருக்கு எதிராகப் பேசத் தொடங்கினார்கள் என்பதும் வெளிப்படுத்தப்படுகின்றது. அதே வேளையில் புனித பவுலடியார் தூய ஆவியாரின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது என்னும் நம்பிக்கையை நமது உள்ளங்களுக்குள் ஊட்டுகின்றார்.

 

இவற்றையெல்லாம் நம் உள்ளத்தில் நன்கு பதித்தவர்களாக,  ஆண்டவரே நம் கடவுள்,  நாம் அவர் மேய்ச்சலின் மக்கள்,  அவர் மேய்க்கும் ஆடுகள் என்ற உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு,  நம் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாது, ஆண்டவரின் குரலைக் கேட்டு அவர் வழியில் செல்ல இத்திருப்பலியில் வல்லமை கேட்டுச் செபிப்போம்

 

முதல் வாசகம்

 

குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்.

 

விடுதலைப் பயண நூலிருந்து வாசகம்   17:3-7

 

அந்நாள்களில்

 

இஸ்ரயேல் மக்கள் சீன் பாலைநிலத்திலிருந்து இரபிதிம் வந்து  அங்கு பாளையம் இறங்கினர்.

 

அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, “நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?” என்று கேட்டனர். மோசே ஆண்டவரிடம்,  “இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!” என்று கதறினார்.

 

ஆண்டவர் மோசேயிடம்,  “இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக் கொண்டு மக்கள் முன் செல்; நைல் நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்கு முன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார். இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் ‘மாசா’ என்றும் ‘மெரிபா’ என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டது.

 

ஆண்டவரின்  அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்   திபா 95: 1-2. 6-9

 

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர், ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.

 

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.
பல்லவி

 

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.
பல்லவி

 

இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.

 

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்  5:1-2, 5-8

 

சகோதரர் சகோதரிகளே,

 

நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம்,  நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம்.  இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால்தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது.

 

அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால்,  நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து          நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

 

ஆண்டவரின்  அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வசனம்   யோவா 4:42, 15

 

ஆண்டவரே,  நீர் உண்மையிலே உலகின் மீட்பர்; நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.

 

நற்செய்தி வாசகம்

 

நிலைவாழ்வு அளிக்கப் பொங்கி எழும் ஊற்று கிறிஸ்துவே.

 

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்  4:5-42

 

அக்காலத்தில்

 

இயேசு சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.

 

அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம்,  “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அச்சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.

 

இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்”
என்றார்.

 

அவர் இயேசுவிடம்,  “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார்.

 

இயேசு அவரைப் பார்த்து,  “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார்.

 

அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது” என்றார்.

 

இயேசு அவரிடம், “நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்” என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, “எனக்குக் கணவர் இல்லையே” என்றார். இயேசு அவரிடம், ” ‘எனக்குக் கணவர் இல்லை’ என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே” என்றார். அப்பெண் அவரிடம்,  “ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டு வந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே” என்றார்.

 

இயேசு அவரிடம்,  “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து               வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபடவேண்டும்” என்றார். அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார். இயேசு அவரிடம், “உம்மோடு பேசும் நானே அவர்” என்றார்.

 

அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் “என்ன  வேண்டும்?” என்றோ, “அவரோடு என்ன பேசுகிறீர்?” என்றோ எவரும் கேட்கவில்லை.
அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,  “நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!” என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.

 

அதற்கிடையில் சீடர்,  “ரபி, உண்ணும்” என்று வேண்டினர். இயேசு அவர்களிடம், “நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது” என்றார். “யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ” என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.

 

‘நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை’ என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக          மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு ‘விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்’ என்னும் கூற்று உண்மையாயிற்று” என்றார்.

 

‘நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்’ என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். சுமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர்    பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்” என்றார்கள்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. எம்மைப் பேணிக்காக்கும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை,  ஆயர்கள்,  குருக்கள்,  துறவிகள் அனைவரும், கிறிஸ்துவே உண்மையிலே உலகின் மீட்பர் என்பதை தங்களுடைய வாழ்வால் வெளிப்படுத்தி,  தம் முன் மாதிரிகையான வாழ்வு என்னும் புகழ்ப் பாக்களால் உம்மைப் போற்றி ஆர்ப்பரிக்கும் சக்தியை  அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. எம்மை உருவாக்கிய தந்தையே இறைவா! நீர் படைத்தவற்றுள் உயர்வான நிலையிலுள்ள நாம்,  உமது இரக்கத்திற்கும், வல்லமைக்கும் எதிராகச் செயற்படாமல்  கீழ்ப்படிதலும்,  நம்பிக்கையும் உள்ளவர்களாக,  தூய்மையான இதயம் கொண்டவர்களாக வாழ உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. தூய ஆவியின் வழியாய் எம் உள்ளங்களில் அன்பைப் பொழியும் தந்தையே இறைவா! உம் அன்பையும்,  அருளையும் விளங்கிக் கொள்ளாது வன்முறை,  போர்,  பிரிவினை போன்றவற்றின்மீது நாட்டம் கொண்டவர்களின் இதயத்திற்குள் உமது அன்பைப் பொழிந்து,  அவர்களை அன்புக் கலாசாரத்திற்குள் அழைத்து வர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. தாகம் தணிக்கும் தந்தையே இறைவா! விடுதலைக்காகவும்,  உரிமை வாழ்வுக்காகவும் தாகித்து நிற்கும் அனைவரினதும் ஏக்கத்தைப் போக்கி அவர்கள் உரிமை வாழ்வினை பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.