பாஸ்காக் காலம் 4ம் ஞாயிறு
2023.04.30
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள். இன்று பாஸ்காக் காலம் நான்காம் ஞாயிறு. நல்லாயன் இயேசுவின் பிரசன்னத்தில் பாஸ்காப் பலியில் பங்கேற்க ஒன்று கூடியுள்ளோம்.
கிறிஸ்தவ வாழ்வின் முழுமையை அடைய நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை என்ன என்பது பற்றிய ஒரு தெளிவு இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நமக்குத் தரப்படுகின்றது. நாம் வாழ்வை அதுவும் அதனை நிறைவாகப் பெற விரும்பினால், நாம் நல்லாயனாகிய இயேசுவின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். நம் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக மனம்மாறித் தூய ஆவியாரைக் கொடையாகப் பெறவேண்டும். நெறிகெட்ட தலைமுறையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நன்மைசெய்து துன்புற்றாலும் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அதனைப் பெறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே இவற்றை நம் வாழ்வில் கடைப்பிடித்து கிறிஸ்தவ வாழ்வின் முழுமையை அடைய வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
கடவுள் அவரை ஆண்டவரும் மெசியாவுமாக்கினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:14, 36 -41
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”
அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது” என்றார்.
மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 23:1-6
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை.
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர் நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.
பல்லவி
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
பல்லவி
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
உங்கள் ஆன்மாக்களின் ஆயரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:20-25
அன்பிற்குரியவர்களே,
நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும். கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
“வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை.” பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்.
நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 10:14-15
அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
ஆடுகளுக்கு வாயில் நானே.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:1-10
அக்காலத்தில்
இயேசு கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்குமுன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரி யாது.”
இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
மீண்டும் இயேசு கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுகள்
1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். அவர்கள் நல்லாயன் இயேசுவின் வழியில் இறைமக்களை வழிநடாத்துவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்புத் தந்தையே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும் நல்லாயனாம் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, எம் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக மனம்மாறி, நெறிகெட்ட வாழ்விலிருந்து விடுபட்டு, நன்மை செய்து துன்புற்றாலும் அதனைப் பொறுமையோடு ஏற்று வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.
3. பசும்புல் வெளிமீது அனைவரையும் இளைப்பாறச் செய்யும் தந்தையே! இன்று அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகவும், கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஆன்மாக்களின் ஆயரும், கண்காணிப்பாளருமான தந்தையே இறைவா! எமது இளைஞர், இளம் பெண்களை நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் நெறிகெட்ட தலைமுறையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொண்டு உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.