திருவருகைக்காலம் 3வது வாரம் ஞாயிற்றுக்கிழமை
திருப்பலி முன்னுரை
இன்று திருவருகைக்காலத்தின் 3ம் ஞாயிறாகும். நாம் ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக பாவமன்னிப்பை பெற்று ஆண்டவரோடு இணைந்திருந்து மகிழ்ச்சியாக வாழ திருச்சபைத்தாய் எம்மை அழைக்கின்றாள்.
இன்றை முதல் இறைவாக்கில் ஆண்டவரின் விடுதைலையாண்டினை அறிவிக்க ஆண்டவரின் ஆவியால் எசாயா இறைவாக்கினர் தாம் அருட்பொழிவு செய்யப்பட்டதை அறிவிப்பதையும், இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் எப்போதும் கடவுளுக்கு நன்றி கூறி மகிழ்வுடன் வாழ தெசலோனிக்க மக்களுக்களை அழைப்பதையும்;, யோவான் நற்செய்தியில் கடவுளின் மகன் இயேசுவைப்பற்றி திருமுழுக்கு யோவான் சான்று பகர்ந்து மக்களை மனமாற்றத்திற்கு அழைப்பதையும் வாசிக்க கேட்போம்.
பாவமன்னிப்பை பெற்று தாழ்ச்சியோடு, திருமுழுக்கு யோவானைப்போல நாமும் எம்மை நாம் ஏற்றுக்கொண்டு, நமது திறமைகளை பிறர் நன்மைக்காக பயன்படுத்தி, இறைவனோடு இணைந்து மகிழ்ச்சியாக வாழும் வரத்தை தொடரும் திருப்பலியில் வேண்டுவோம்.
முதல் வாசகம்
ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-2a, 10-11
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
லூக் 1: 47-48. 49-50. 53-54
என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.
47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. 48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். பல்லவி
49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். 50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். பல்லவி
53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். 54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி
இரண்டாம் வாசகம்
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது கடவுள் உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் காப்பாராக!
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-24
சகோதரர் சகோதரிகளே, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
நற்செய்திக்கு முன் வசனம் வாழ்த்தொலிஎசா 61: 1ac
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8,19-28
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார். “நீர் தாம் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே” என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
- திருச்சபையின் ஞானமேய்ப்பர்கள் அனைவரும் ஆவியினால் வழிநடத்தப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை விசுவாசத்தில் வளர்த்தெடுக்க ஆர்வமுடன் உழைப்பதற்கு தேவையான அருளை பொழிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
- தூய பவுலின் போதனைக்கேற்ப நாம் இன்பத்தின் போதும், துன்பத்தின் போதும் கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வாழ்வு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றாம்.
- திருவிருந்து விண்ணக விருந்தின் முன்தலை என்பதை உணர்ந்தவர்களாக திருப்பலியில் தகுதியான உள்ளத்தோடு கலந்து கொள்ள வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இறையரசுப் பணிகள் மிகுந்து கிடக்கும் இக்காலகட்டத்தில் அதை நிறைவேற்ற தியாகமும், அர்ப்பணிப்பும் நிறைந்த உள்ளம் கொண்ட பல இளைஞர், யுவதிகள் முன்வர அவர்களையும் நீர் அழைத்தருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.