இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா
திருப்பலி முன்னுரை
புத்தாண்டின் தொடக்க நாளாகிய இன்று இயேசு பிறந்து 8ம் நாளாகும். இறைமகனுக்கு இயேசு எனப்பெயரிட்ட இந்நாளில் விசேடமாக அன்னை மரியா இறைவனின் தாய், அவர் நமக்கெல்லாம் அன்னையாவாள் என்பதை அறிவுத்துகின்றது எமது தாய்த்திருச்சபை.
எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசே வழியாக ஆரோனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் ஆசீர் எவ்வாறு வழங்கவேண்டுமென்பதை அறிவுறுத்துகின்றார். இரண்டாம் இறைவாக்கில் “கடவுளின் ஆசீர் தம் மகன் கிறிஸ்து வழியாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக புனித பவுல் கலாத்தியர்களுக்கு கூறகின்றார். லூக்கா நற்செய்தியாளர் இடையர்கள் பாலன் இயேசுவை சந்தித்த நிகழ்வினூடாக அன்னை மரியா இயேசுவின் தாய் என்பைதை சித்தரித்துக்காட்டுகின்றார்.
இப்புதிய ஆண்டில் அன்னை மரியாளைப் பின்பற்றி தாழ்ச்சியும், இறைநம்பிக்கையும் கொண்ட நற்கிறிஸ்தவர்களாக வாழ முயலுவோம். எம்மையும், எம் குடும்பங்களையும் எமக்குள்ள யாவற்றையும் ஆசீர்வதித்து காத்திட வேண்டுமென்று தொடரும் திருப்பலியில் பங்குகொள்வோம்.
முதல் வாசகம்
இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 1a)
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
1கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். – பல்லவி
4வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். – பல்லவி
5கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!7கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. – பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7
சகோதரர் சகோதரிகளே,
காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே,’ எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபி 1: 1-2
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21
அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
- வாழ்வான இறைவா! உம் வார்த்தையை வாழ்வாக்கிய உம் திருஅவையின் திருப்பணியாளர்களுக்கு இறைமக்களை நேரிய பாதையில் வழிநடத்திச்செல்ல தேவையாள உடல், உள சுகத்தையும், இறையருளையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எம்மைச்சூழ நிகழ்பவற்றுள் நன்மை, தீமையை பகுத்தறிந்து நல்ல பங்கைத்தேர்ந்தெடுக்க வேண்டிய ஞானத்தையும், அறிவையும், இறைபக்தியையும் தூய ஆவியார் மூலம் எமக்கு நிறைவாக அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எம்மைத் தேடிவந்த இறைவா! இவ்வாண்டு முழுவதும் எங்களையும், எம் குடும்பங்களையும், நாம் செய்யவிருக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆசீர்வதித்து எம்மை நல்வழியில் நடத்திச்செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- கடவுளின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாளின் பங்கு அளப்பரியது என்பதை உணர்ந்து தினமும் குடும்ப செபமாலை சொல்லுதல், விவிலியம் வாசித்தல் ஆகிய நற்பழக்கத்தை எம் அன்றாட வாழ்வில் பழக்கப்டுத்திக்காள்ள ஆண்டவரே எமக்கு ஆசீர் வழங்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.