பொதுக்காலம் 26ம் ஞாயிறு

 பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு (29 செப்டம்பர் 2024)

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக்காலத்தின் 26ம் ஞாயிறாகும். நம்மை மையப்படுத்தி சிந்திப்பதைத் தவிர்த்து, அயலவர்களோடு இணைந்து செயல்பட  அழைக்கப்படுகின்றோம்.

முதல் இறைவாக்கில் கூடாரத்திற்கு வராத இரண்டு மூப்பர்கள் ஆவியைப்பெற்று இறைவாக்குரைத்த போது மோசே பரந்த மனப்பான்மையோடு அவர்களை ஏற்றுக்கொள்வதையும், இரண்டாம் இறைவாக்கில் ஏழைகளுக்கு தீங்கு செய்யும் பணக்காரரை புனித யாக்கோபு எச்சரிப்பதையும், மாற்கு நற்செய்தியில் திருத்தூதர்களை சாராத ஒருவர் பேயோட்டுவதைக் கண்ட இயேசு அவரை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்வதையும் வாசிக்க கேட்போம்.

பொறாமை, பகைமைகளை தவிர்த்து உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்க வரம் கேட்டு தொடரும் கல்வாரிப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

முதல் வாசகம்

அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 25-29

அந்நாள்களில்

ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கி விட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள்மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை.

ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்கு உரைத்தனர். ஓர் இளைஞன் ஓடி வந்து மோசேயிடம், “எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்கு உரைக்கின்றனர்” என்று சொன்னான். உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்றார். ஆனால் மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!” என்றார். பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7,9. 11-12. 13 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. 9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. – பல்லவி

11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு. 12 தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். – பல்லவி

13 ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். – பல்லவி

இரண்டாம் வாசகம்

உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே!

உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 17: 17b, a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-48

அக்காலத்தில்

யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.

உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.”

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. தூய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு இறைவாக்குரைக்கும் பணிக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு திருப்பணியாளர்களுக்கும், அவர்கள் பணியை சிறப்பாகச் செய்வதற்கு வேண்டிய உடல் உள ஆரோக்கியத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. இவ்வுலக செல்வத்தின் நிலையாமையை உணர்ந்து பொருள்களில் பற்றினை விடுத்து, நிலையான கடவுள் மேல் பற்றுக் கொண்டு வாழ வரம் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. இறைப்பணியாற்றும் குருக்கள், துறவியருக்கு எங்களால் இயன்ற உதவிகளையும், ஒத்துழைப்பினையும் வழங்கி விண்ணுலகில் எங்களுக்குரிய கைமாறுகளை பெற்றுக் கொள்ளும் வரம் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. கீழ்ப்படிவு, மன்னிப்பு, அன்பு, நம்பிக்கை ஆகிய நற்பண்புகளுடன் கிறிஸ்து விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்ந்தாற்றிட தேவையான இறைஞானத்தை எமக்களித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.