பொதுக்காலம் 27ம் ஞாயிறு

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு (06 அக்டோபர் 2024)

திருப்பலி முன்னுரை

மனித ஆளுமையை வளர்க்கும் குடும்பத்தின் மேன்மையை உணர்ந்து வாழ பொதுக்காலத்தின் 27ம் ஞாயிறாகிய இன்றைய வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகின்றோம்.

முதல் இறைவாக்கு அனைத்தையும் படைத்த கடவுள் இறுதியாக தம் சாயலில் மனிதனையும், அவனுக்கு துணையாக பெண்ணையும் படைத்ததை எடுத்துக்கூறுகின்றது. இரண்டாம் இறைவாக்கில்  மானிடர் மேல் இறைவன் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த, இறைமகன் கிறிஸ்து சிலுவை சாவை ஏற்றார் என்பதையும், நற்செய்தியில் மணவிலக்கு என்பது இறைவனின் திட்டத்திற்கு எதிரானது என்று பரிசேயருக்கு இயேசு வலியுறுத்திக் கூறுவதையும் வாசிக்க கேட்போம்.

திருமணத்தின் முறிவபடாத்தன்மையையும், ஒருமைத்தன்மையையும் குறித்துக்காட்டும் கடவுளின் படைப்பை வியந்து நோக்கும் நாம் குடும்ப, சமூக உறவை முழுமையாக்கவல்ல இறையன்பையும், பராமரிப்பையும் வேண்டி தொடரும் திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம்

இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-24

அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.

ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.

அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 5 )

பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! – பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். – பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! – பல்லவி

6 நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! – பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 9-11

சகோதரர் சகோதரிகளே,

நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது.

கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. தூய்மை யாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16

அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.

சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. அர்ப்பண வாழ்வில் பல போராட்டங்களை சந்திக்கும் திருப்பணியாளர்கள் அனைவருக்கும் இறையருளை நிறைவாக தந்து துன்பங்கள் வாழியாக கிறிஸ்துவின் மாட்சியில் பங்கு கொள்ளும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. திருக்குடும்பத்தைப் பின்பற்றி கணவன் மனைவியர் தம்முள் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாக வாழவும், பெற்றோர்-பிள்ளைகள் உறவு ஆரோக்கியமானதாக இருக்கவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. இங்கு ஒன்றாக குழுமியுள்ள நாம் ஒவ்வொருவரும் இறைவார்த்தையை அன்றாடம் வாசித்து, சவால்கள் நிறைந்த உலகில் நிறைந்த பலன் தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. எம் பிள்ளைகள் மத்தியில் இறையழைத்தலின் முக்கியத்துவத்தை விதைத்திடவும், நன்மை தீமையை பகுத்தறிந்திடவும் அவர்களுக்கு தூய ஆவியாரின் வரங்களை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5.