FIFTH SUNDAY OF EASTER

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு

2022.05.15

 

முன்னுரை

 

அன்பு நிறை சகோதர சகோரிகளே! அனைத்தையும் புதியது ஆக்குகின்ற நம் இறைத் தந்தையின் தூய நாமத்தில் நல் வாழ்த்துகள் கூறி பாஸ்கா கால ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

 

“கடவுள் தாமே நம்மோடு இருப்பார், அவரே நம்முடைய கடவுளாய் இருப்பார். நம்முடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது, முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன” என்னும் இன்றைய இறைவார்த்தைகளில் வரும் இறைவனின் வாக்குறுதிகள் புதியதொரு சக்தியை நமக்குத் தருவதாக இருக்கின்றது.

 

இந்த ஆசீர்வாதத்தைத்தைப் பெற்றுக் கொள்ளும் நாம் தொடர்ந்து வரும் இறைவார்த்தைகளான “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்னும் இயேசுவின் வார்த்தைகளை நமது நாளாந்த வாழ்வில் கடைப்பிடித்து ஒழுக வரம் வேண்டித் தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.

 

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்    14:21-27

 

அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப் பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள்.

 

அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்  திபா 145: 8-13

 

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!

 

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.
பல்லவி

 

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.
பல்லவி

 

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.
பல்லவி

 

 

இரண்டாம் வாசகம்

 

கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார்.

 

திருத்தூதர் யோவான் எமுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம்   21: 1-5

 

யோவான் நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று.

 

அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன” என்றது.

 

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், ” ‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   யோவான் 13:34

 

அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார். ஆண்டவர். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

யோவான் எமுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்    13: 31-35

 

யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.

 

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்றார்

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1.இரக்கமும் கனிவும் உடையவரான தந்தையே இறைவா! உமது சீடர்களாக வாழ நீர் அழைத்துள்ள எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவிகள் அனைவரும், திருத்தூதர்களைப் போல வேதனைகளை ஏற்றுக்கொள்ளவும், நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், மற்றவரை முழுமையாக அன்பு செய்யவும், உண்மைச் சீடராக வாழவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2.அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுகின்ற தந்தையே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் வேதனைகளை ஏற்றுக்கொண்டு, நம்பிக்கையில் நிலைத்திருந்து, ஒருவரையொருவர் அன்பு செய்து வாழும் மனப்பக்குவத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3.எல்லாருக்கும் நன்மை செய்பவரான தந்தையே இறைவா! வேதனையிலும், கடன் தொல்லையிலும், வேலையின்றியும், வதிவிட அனுமதியின்றியும் வாழந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் உம்முடைய இரக்கத்தால் நல்வாழ்வு பெற்று மகிழச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4.எளிதில் சினம் கொள்ளாதவரான தெய்வமே இறைவா! உலகில் இன்று பெருகிவரும் கொடிய நோய்களையும், அதற்குக் காரணமான இரசாயனப் பொருட்களையும் கட்டுப்படுத்தி, எல்லா அழிவுகளிலிருந்தும் மக்களைக் காத்து, அனைவரும் மகிழ்வோடு சுகநலத்தோடு வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.