பொதுக்காலம் 12ஆம்  ஞாயிறு

பொதுக்காலம் 12ஆம்  ஞாயிறு (23 ஜூன் 2024)

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக்காலத்தின் 12ம் ஞாயிறாகும். வாழ்வில் சோதனைகள், துன்பங்கள் ஏற்படும் போது இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும். ஆண்டவரே எமக்கு அவற்றிலிருந்து வெளிவருவதற்குரிய வல்லமையை, ஆற்றலை எமக்களித்து எம்மைக் காக்கின்றார்.

முதல் இறைவாக்கில் யோபு வழியாக துன்பத்தின்போது கடவுளை நம்பினால் அவற்றை வெல்வதற்காக ஞானத்தை அருளுகின்றார் என்பதையும், இரண்டாம் இறைவாக்கில் கிறிஸ்துவின் பேரன்பினால் ஆட்கொள்ளப்பட்டு துன்பங்களை மகிழ்வோடு ஏற்றுக்கொள்பவர் புதுப்பிறப்படைவர் என்பதையும், நற்செய்தியில் இயேசுவின் அமைதியான தூக்கம் கடவுளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டால் துன்பங்கள், சோதனைகளுக்கு மத்தியிலும் நிறைவாக, மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதையும் கற்றுக்கொள்வோம்.

நிகழ்காலம், எதிர்காலத்தையிட்டு எம்மை வாட்டிவதைக்கும் பயவுணர்விலிருந்து எம்மை விடுவித்து துணிவைத் தர, நம்பிக்கையை ஆழப்படுத்த இயேசுவின் உடனிருப்பை வேண்டுவோம்.

முதல் வாசகம்

உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!

யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 8-11

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:

“கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடிய பொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதி துணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி ‘இதுவரை வருவாய்,  இதற்கு மேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!’ என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?”

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 107: 23-24. 25-26. 28-29. 30-31 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

23 சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர். 24 அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். – பல்லவி

25 அவர் ஒரு வார்த்தை சொல்லஇ புயல் காற்று எழுந்தது; அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது. 26 அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது. – பல்லவி

28 தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். 29 புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. – பல்லவி

30 அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார். 31 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! – பல்லவி

இரண்டாம் வாசகம்

பழையன கழிந்து புதியன புகுந்தன.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-17

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.

ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயாஇ அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

ஒரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டுஇ படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.

அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.

பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. அறுவடையின் ஆண்டவரே! ஓநாய்களைப்போல காயப்படுத்த காத்திருக்கும் உலகின் தீமைகளிலிருந்து உம் தூய ஆவியாரின் துணையுடன் திருச்சபையின் திருப்பணியாளர்களைக் காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. இங்கு ஒன்றாக குழுமியுள்ள எங்களை நிறைவாக ஆசிர்வதித்து நாம் ஒவ்வொருவரும் இறைவார்த்தையில் வேரூன்றி, அன்றாடம் அதை வாசித்து, சவால்கள் நிறைந்த உலகில் நிறைந்த பலன் தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. பல்லினக்கலாச்சாரச் சூழலில் வாழும் கணவன் மனைவி பிள்ளைகள் நம்பிக்கையிழந்து சந்தேகம், வெறுப்பு, புரிந்துணர்வின்மை போன்ற உறவுப் புயலில் சிக்கித்தவிக்கிறார்கள். இவர்கள் உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு அமைதியில் நிலைத்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. மாற்றுத்திறனாளிகள், அறிதிறன் குறைபாடுடையவர்கள் இச்சமுதாயத்தின் வினோதமான பார்வையினால் துன்பப்படுகிறார்கள். இவர்களை அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு நீர் தாமே கொண்டுபோய்ச்சேர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.