ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி (17 ஏப்ரல் 2025)
திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலியை கொண்டாடுகின்றோம். ஆண்டவர் திருத்தூதர்களோடு தமது இறுதி இரவு உணவை அருந்தியதும், பணிவிடை புரிய தன்னை முன்மாதிரியாக காட்டி, தாழ்ச்சியை அவர்களுக்கு கற்பிக்க திருத்தூதர் பாதங்களைக் கழுவியதும் இன்றைய நாளில்தான். குருத்துவம், நற்கருணை ஆகிய இரண்டு திருவருட்சாதனங்ளையும் ஆண்டவர் இயேசு இவ்விரவில்தான் தோற்றுவித்தார். அன்புக்கட்டளையை கொடுத்ததும் இன்றுதான்.
முதல் வாசகத்தில் இஸ்ராயேலர் எகிப்தில் இறுதி பாஸ்கா இரவுணவை உண்ணும் முறையை விடுதலைப்பயணநூல் எடுத்தியம்புகின்றது. இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கொருந்தியருக்கு ஆண்டவராகிய இயேசுவின் இறுதி இரவு உணவை நினைவு படுத்தி, ஒற்றுமையையும், பகிர்வையும் கற்றுக்கொடுக்கின்றார். நற்செய்தியில் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் இறுதி இராவுணவின் உயிரோட்டமுள்ள நிகழ்வுகளை புனித யோவான் எடுத்துக்கூறுகின்றார்.
இன்றைய வழிபாடானது இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை வழிபாடு, நற்கருணைப்பவனி என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இன்றைய நாளில் இயேசுவின் பிரதிபலிப்பாக செயற்படும் உலகில் உள்ள அனைத்து குருக்களுக்காகவும் இறைவனுக்கு நன்றிகூறுவதோடு, அவர்களின் உடல், உள, ஆன்ம நலனுக்காக சிறப்பாக இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசகம்
பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14
எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்:
அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.
நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா’. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.
இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16)
பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.
12ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். – பல்லவி
15ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். – பல்லவி
17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். – பல்லவி
இரண்டாம் வாசகம்
அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26
சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.
ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 13: 34
‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்‘ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15
பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார். அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார். தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ‘உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார்.
அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்றார்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்
- நல்லாயனாகிய இறைவா! குருத்துவம் உருவாக்கப்பட்ட இந்தப் புனித நாளில் எம் திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் நல்ல உடல், உள, ஆன்ம நலம் பெற்று உம் துணையோடும், தூய ஆவியின் வழிகாட்டுதலோடும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள எங்களை நிறைவாழ்வை நோக்கி நடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- வழிநடத்தும் வள்ளலே எம் இறைவா! எம் இயக்குநர் மற்றும் எங்கள் பணியகத்தில் பணியாற்றிய அனைத்து அருட்பணியாளர்களுக்காகவும் மன்றாடுகிறோம். சிறப்பாக எம் இயக்குநருடன் நீரே உடனிருந்து எங்கள் பணியகத்தின் வளர்ச்சிக்கும், பங்கு மக்களாகிய எங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர் முன்னெடுக்கும் செயல்களை ஆசீர்வதிக்கவும், எம் பணியகம் இன்னும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெறவும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- அன்பே உருவான இறைவா! பகிர்தலின் விழாவாகிய இன்று ஏழைகள், நோயாளிகள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். நற்கருணையை ஏற்படுத்திய இந்நன்நாளில் அனைவரும் நற்கருணையின் அற்புதத்தினால் அனைத்து நலன்களும் பெற்று சமத்துவ சமூகம் எம்மில் மலர அவர்களிடையே இறையருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- தாயும் தந்தையுமான இறைவா! இங்குள்ள அனைத்து குடும்பங்களுக்காகவும், எம் தாய் நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நீரே அனைத்து குடும்பங்களுக்கும் தலைவராக இருந்து வழிநடத்திடவும், எங்களின் தேவைகள், ஏக்கங்கள், வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றிடவும், எம் வாழ்வு முழுவதையும் உமது நலன்களால் நிறைவு செய்யவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.