04th Sunday in Ordinary Time

பொதுக்காலம்  நான்காம்  ஞாயிறு

2023.01.29

முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! ஒடுக்கப்பட்டோருக்கான நீதியை நீதியை நிலை நாட்டி, பசித்திருப்போருக்கு உணவளித்து சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிக்கும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துகள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் பொதுக்கால நான்காம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

விரக்தியிலும்,  நம்பிக்கையின்மையிலும்,  துன்பத்திலும் இருப்போருக்கான ஒரு தெளிவையும், உறுதியையும், உற்சாகத்தையும்,  நம்பிக்கையையும் இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு வழங்கி நிற்கின்றன. “ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர், இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் அடையவிருக்கும் அருள் நலன்கள் எவை என்பதையும் நாம் இன்று தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.

 

நாமும் கனிவுடையோராகவும்,  நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோராகவும்,  இரக்கமுடையோராகவும், தூய உள்ளத்தினராயும் , அமைதியை ஏற்படுத்துவோராயும் வாழ அருள் வரம் கேட்டுத்  தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்.

ஏழ்மையும் எளமையும் உள்ள மக்களை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்.

 

இறைவாக்கினர் செப்பனியா நூலிருந்து வாசகம்  2:3, 3:12-13

 

செப்பனியா கூறியது: நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப் பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள். நேர்மையை நாடுங்கள். மனத் தாழ்மையைத் தேடுங்கள். ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.

 

ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன். அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள். வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது. அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தை போல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்”.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்  திபா. 146: 7-10

பல்லவி : ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

 

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார். பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார். சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.

 

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார். தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார். நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்.

 

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார். ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா!

 

இரண்டாம் வாசகம்.

வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.

 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1:26-31

 

சகோதர சகோதரிகளே,

நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்?

 

ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த,  மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த,  வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள்முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.

 

அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, ”பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்”.

ஆண்டவரின்  அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  மத் 5:12

அல்லேலூயா,  மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்.

எளிய உள்ளத்தோர் பேறுபெற்றோர்.

 

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்  1:2-12

 

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

 

‘ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப் படுவர்.

 

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர் களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

1. எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்யும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை,  ஆயர்கள்,  குருக்கள், துறவிகள் அனைவரும் கனிவுடையோராகவும், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோராகவும்,  இரக்கமுடையோராகவும், தூய உள்ளத்தினராயும், அமைதியை ஏற்படுத்துவோராயும் பணியாற்றுவதற்கு வேண்டிய வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. பார்வையற்றோரின் கண்களைத் திறக்கும் தந்தையே இறைவா! எம்மிடம் உள்ள ஆன்மிகத் தெளிவின்னையைப் போக்கி. கனிவுடையோராகவும்,  நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோராகவும்,  இரக்கமுடையோராகவும், தூய உள்ளத்தினராயும், அமைதியை ஏற்படுத்துவோராயும் நாம் வாழ எமக்கு ஆற்றல் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா! பல்வேறுவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. ஞானத்தின் ஊற்றான தந்தையே இறைவா! எமது இளைஞர்கள் காலத்தின் அடையாளங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு,  ஞானத்தோடும்,  விவேகத்தோடும் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து அவர்களைப் புனிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.