பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு
2023.02.05
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நலமான வாழ்வை நமக்களித்து, நாம் மன்றாடும் போது நமக்குப் பதிலளித்து ‘இதோ! நான்’ என மறுமொழி தரும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் பொதுக்கால ஐந்தாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் பெறும் அருள் நலன்களை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. அத்தோடு கிறிஸ்தவ வாழ்வு எப்படி வாழப்படவேண்டும் என்பதும் நமக்குச் சுட்டிக்காட்டப்படுகின்றது. சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். என்னும் இறைவார்தை நமது ஆன்மிக வாழ்விற்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்த விளைகின்றது.
இன்றைய திருப்பலியில் பங்கேற்றுச் செபிக்கும் நாம்: நம் ஆண்டவர் இயேசு நமக்குச் சொல்வதுபோல் நாம் மண்ணுலகிற்கு உப்பாகவும், உலகிற்கு ஒளியாகவும் இருந்து நம் விண்ணகத் தந்தையைப் போற்றிப்புகழ நம்மை முழுமனத்துடன் அர்ப்பணிப்போம்.
முதல் வாசகம்
உன் ஒளி விடியல் போல் எழும்.
இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம் 58:7-10
ஆண்டவர் கூறுவது:
பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!
அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார்.
உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டுஇ சுட்டிக் காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 112: 4-9
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்.
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
பல்லவி
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
பல்லவி
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுளைப் பற்றிய மறைபொருளை உங்களுக்கு அறிவித்தேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:1-5
சகோதர சகோதரிகளே,
கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.
நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளில் வல்லமையே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 8:12
அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:13-16
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுகள்
1. இதோ! நான் என மறுமொழி தரும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் இருளில் ஒளியெனஇ நேர்மையுள்ளவரிடையே மிளிரவும், அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருக்கவும், அவர்கள் தம் பணிகளில் நீதியுடன் செயல்படவும் அவர்களை வழிநடாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நலமான வாழ்வை எமக்களிக்கும் தந்தையே இறைவா! சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்தி விட்டு, பசித்திருப்போருக்காக எம்மையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்திட எமக்கு வேண்டிய நல்லுள்ளத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. வல்லமையின் தந்தையே இறைவா! பல்வேறு பணிப்பெறுப்புக்களைப் பெற்றுள்ள நாம் அவற்றின் மேன்மையை உணர்ந்து, தாழ்ச்சியோடு செயற்படவும், பொது நலத்தையும், இறை மகிமையையும் கருத்திற் கொண்டு தூய உள்ளத்தோடு பணியாற்றவும் வேண்டிய நல்லுள்ளத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. உலகின் ஒளியான தந்தையே இறைவா! எமது இளைஞர்களுக்கு நீரே அனைத்து வழிகளிலும் தெளிவையும், நல்ல பண்புகளையும் கொடுத்து, அவர்கள் என்றும் உமக்குரியவர்களாய் வாழ அருள் தந்து ஆசீர்வதித்து வழிநடாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.