பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு
2023.01.15
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் ஆற்றலாகவும், அன்பாகவும் இருக்கும் இறைத் தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் பொதுக்கால இரண்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
ஆண்டவர் பர்வையில் நாம் ஒவ்வொருவரும் மதிப்புடையவர்கள், எனவே அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதே நாம் அவருக்குக் காட்டும் பதில் அன்பாக இருக்கின்றது. அத்தோடு ஆண்டவர் தாம் வாக்களித்த அனைத்தையும் நமக்காகச் செய்து முடிப்பார் என்னும் வாக்குறுதியில் அசையாத நம்பிக்கை கொண்டு பொறுமையோடு காத்திருந்து செயற்படுவது நமக்கு எண்ணிறைந்த ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் என்பவையே இன்றைய நாளின் செய்திகளாக நமக்குத் தரப்படுகின்றன. அதே வேளையில் பலியையும் காணிக்கையையும் இறைவன் விரும்பவில்லை. எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் அவர் கேட்கவில்லை. மாறாக தூய உள்ளத்தையே அவர் கேட்கின்றார் என்னும் உண்மையும் உணர்த்தப்படுகின்றது.
இச் செய்திகளை நம் உள்ளத்தில் ஆழப் பதித்தவர்களாக கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மை அர்ப்பணிக்கவும், இறை மகிமைக்காக உழைக்கவும் அருள் வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
உலகம் முழுவதும் மீட்பை அடைதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம் 49:3, 5-6
அவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்’ என்றார்.
யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்:
அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் மீட்பை அடைதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 40: 1-3, 6-9
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்.
பல்லவி
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, ‘இதோ வருகின்றேன்.’ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது. என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான்.
பல்லவி
என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்க வில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-3
கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும்,
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 1:14, 12
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு வருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்: அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இதோ கடவுளின் செம்மறி! இவரே உலகத்தின் பாவத்தைப் போக்குபவர்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:29-34
இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் செம்மறி! செம்றியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.
தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்”.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. பணியாளரின் பலமும், ஞானமுமாகிய தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் உமது திருச்சட்டத்தை தம் உள்ளத்தில் இருத்தி உமது திருவுளம் நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றவர்களாக வாழ்வதற்கு வேண்டிய வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. தூயவரான தந்தையே இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் உமது விருப்பத்தை தெளிவாக அறிந்து, அதன்படி வாழவும், அனைவரோடும் நல்லுறவோடும், அமைதியோடும் வாழவேண்டிய மனப் பக்குவத்தை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்புத் தந்தையே இறைவா! இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு அவருக்குக் கீழ்ப்படியுமாறு அவர் பெயர் விளங்க அவர் வழியாகவே பல்வேறு பணிகள் செய்வதற்குரிய பல்வேறு வகையான அருட்கொடைகளையும், ஆற்றல்களையும் பெற்றுக்கொண்ட நாங்கள் அவற்றை தூய உள்ளத்தோடு இறைபணிக்காய்ப் பயன்படுத்தி வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஒளியும், மீட்புமான தந்தையே இறைவா! எமது இளைஞர்களுக்கு நீர் ஒளியாகவும், வழியாகவும் இருந்து வழிகாட்டி, தூய ஆவியின் வல்லமையை உணர்ந்து உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.