15th sunday of Ordinary Season

பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு

2022.07.10

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்க வார்தைகளால் நம்மை வாழ்விக்கும் நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலப் 15ஆம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நாம், நம் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் நம் கடவுளா கிய ஆண்டவரிடம் அன்பு கூர வேண்டும். நம் மீது நாம் அன்புகூர்வது போல் நமக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூரவேண்டும். இவ்வாறு நாம் செயற்படும்போது நாம் வாழ்வோம் என்னும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை இயேசு மீளவும் இன்று நமக்கு வழங்குகின்றார்.

இந்த மகிழ்ச்சி நிறை செய்திக்காகவும், ஆசீருக்காகவும் இறைவனுக்கு நமது நன்றியைத் தெரிவிப்பதோடு, நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்து, வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கும் அவரது வார்த்தைகளை ஏற்று அதன்படி வாழவும், பிறர் பணியில் இறைபணியை நிறைவாக்கவும் அருள்வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது.

 

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 10-14

 

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.

 

ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை. உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. நாம் அதைக் கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல் கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது. உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்  திபா 19: 7-10

 

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. இதயத்தை மகிழ்விக்கின்றன.

 

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது. அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது. எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.

 

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை. அவை கண்களை ஒளிர்விக்கின்றன.

 

ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது. அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை. அவை முற்றிலும் நீதியானவை.

 

அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை. தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.

 

இரண்டாம் வாசகம்

 

அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.

 

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்  1: 15-20

 

இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல். படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட் புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சி யாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்ட னர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத் துக்கும் முந்தியர் அவரே. அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.

 

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி    யோவான் 6:63,68

 

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மி டம்தானே உள்ளன. அல்லேலூயா

 

நற்செய்தி வாசகம்

“எனக்கு அடுத்திருப்பவர் யார்?”

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:25-37

 

அக்காலத்தில்

திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்டநூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக,  “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர். அப்படியே செய்யும். அப்பொழுது வாழ்வீர்” என்றார்.

 

அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:

 

ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர் மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, இவரைக் கவனித்துக்கொள்ளும். இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன் என்றார்.

“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. இதயத்தை மகிழ்விக்கும் நெறிமுறைகளைக் கொண்டுள்ள தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனை வரினதும் வார்த்தைகளும், செயற்பாடுகளும் அனைத்து மக்களுக்கும் ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் அமைந்திடவும், இறையன்பை வெளிப்படுத்துவதாக அமைந்திடவும் வேண்டிய ஞானத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்க வார்தைகளால் எம்மை வாழ்விக்கும் தந்தையே! உமது வாழ்வு தரும் வார்த்தைகளை யும், எம் இதயத்தை மகிழ்விக்கும் உமது நியமங்களையும் ஏற்று அதன் படி வாழவும், பிறருக்குப் பணியாற்றுவதன் வழியாக உமது பணியை நிறைவாக்கவும், எமக்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. நீதியோடு ஆளும் தந்தையே இறைவா! தம்மை நேர்மையாளர் எனக் காட்டிக்கொண்டு, மக்களை தவறான பாதையில் அழைத்துச் செல்லும் அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சி யாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் தங்கள் தீய போக்கிலிருந்து மாறி உண்மையின் வழிக்குத் திரும்பிடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. புத்துயிர் அளிக்கும் தந்தையே இறைவா! இன்றைய நாட்களில் உமது இரக்கம் அதிகமாகத் தேவைப்படுவோருக்கு சிறப்பான ஆசீர்வாதங்களைக் கொடுத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.