பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு
2022.07.24
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நாம் மன்றாடிய நாளில் நமக்குச் செவி சாய்த்து நம் மனத்திற்கு வலிமை அளிக்கும் நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலம் பதினேழாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
இறைவனின் இரக்கமும் அன்பும், நம்மேலான அவரது கரிசனையும் எப்படி இருக்கின்றது என்பதை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு எடுத்தியம்புகின்றன. நாம் மன்றாடும் நாளில் ஆண்டவர் நமக்குச் செவிசாய்க்கின்றார். நம் மனத்திற்கு வலிமை அளிக்கின்றார். நலிந்தோரை அவர் கண்ணோக்குகின்றார். நாம் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், நம் உயிரை இறைவன் காக்கின்றார். அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது என்னும் உண்மைகள் நமக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் அமைந்துள்ளன.
இறைவனின் இந்தக் கருணை மிகு ஆசீருக்காக நன்றி கூறுவதோடு செபத்தில் நிலைத்து நின்று சாட்சிய வாழ்வு வாழ அருள்வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம்!
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 20-32
அந்நாள்களில்
ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்” என்றார்.
அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார்.
அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.
அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, “தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?” என்றார். அதற்கு அவர், “நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்” என்றார்.
மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, “ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?” என்று கேட்க, ஆண்டவர், “நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்” என்றார்.
அப்பொழுது ஆபிரகாம், “என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?” என, அவரும் “முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்.
அவர், “என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன். ஒரு வேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?” என, அதற்கு அவர், “இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்” என்றார்.
அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 138: 1-3,6-8
பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன். தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்.
பல்லவி
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன். ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர். என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.
பல்லவி
ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர். எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர். ஆனால், செருக்குற்றோரைத் தொலையிலில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர். என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்.
பல்லவி
உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர். ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு. உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-14
சகோதரர் சகோதரிகளே!
நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்.
உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி உரோமர் 8:15
அல்லேலூயா, அல்லேலூயா! பிள்ளைகளுக்கு உரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:1-13
அக்காலத்தில்
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்” என்று கற்பித்தார்.
மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. உன்னதத்தில் உறையும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் தங்களது செப வாழ்வில் ஆழம் பெறவும் ஆபிரகாமைப்போல, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டு, அவர்களுக்காக என்றும் இறைவேண்டல் செய்யும் நிறைமனதை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நாம் மன்றாடும் நாளில் நமக்குச் செவிசாய்க்கும் தந்தையே! நாம் ஆபிரகாமைப்போல அடுத்தவர் நலனில் அக்கறை யுடையவராக திகழ்ந்து செபத்தில் நிலைத்து நின்று சாட்சிய வாழ்வு வாழ எமக்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நம் மனத்திற்கு வலிமை அளிக்கும் தந்தையே இறைவா! இன்று பல்வேறு பிரச்சனைகளால் தாக்கப்பட்டு, வேதனை களோடும், இழப்புக்களோடும் என்ன செய்வதென்று தெரியாது அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் அனைவரையும் தேற்றி புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டும் தந்தையே இறைவா! இன்றைய மக்களைத் தாக்கும் போதைப்பொருள், ஆபாச நாட்டங்கள், ஒழுக்க பிறழ்வுகள், களியாட்டம் போன்ற மானிட வர்க்கத்தின் எதிரிகளை முறியடித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.