21st Sunday of Ordinary Time 2022

பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு

2022.08.21

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! மாறாத பேரன்பும், இரக்கமும் உடையவரான நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.0

 

“தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்”, ‘நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்” என தம் பிள்ளைகளிடம் பேசுவது போல் இறைவன் நம்மோடு பேசி நமக்கு அறிவுரை வழங்குகின்றார். துன்பங்கள் துயரங்கள் நிலையானவையுமல்ல, வாழ்வின் முடிவுமல்ல என்பதே இன்று நமக்கு இறைவனால் வழங்கப்படும் செய்தியாகின்றது.

 

இச் செய்தியை ஆழமாக நம் உள்ளத்தில் பதித்தவர்களாக ஆண்டவர் நம்மைத் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதிருப்போம். அவர் கண்டிக்கும் போது தளர்ந்து போகாதிருப்போம். நாம் இறைவன் காட்டும் நேர்மையான பாதையில் நடந்து செல்லுவோம் அதற்கான அருள் வரம்  கேட்டுத்  தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

உங்கள் உறவின் முறையாரை அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து என் திருமலைக்கு அழைத்து வருவார்கள்.

 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21

 

ஆண்டவர் கூறியது:

 

மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்;  பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.

 

அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல்,  அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும், லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல் திபா 117: 1-2

 

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

 

பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!
பல்லவி

 

ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.

 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-7, 11-13

 

சகோதரர் சகோதரிகளே,

 

தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: “பிள்ளாய்,  ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்”. திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ?

 

இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல்,  துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே,  “தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்”. அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14:6

 

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா

 

நற்செய்தி வாசகம்

கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:22-30

 

அக்காலத்தில்

 

இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம்,  “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும் தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:

“இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள்.

ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

 

ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்”.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. மாறாத பேரன்பு உடையவரான தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் ‘உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்னும் அழைப்பினை ஆழமாக உணர்ந்து தம் வாழ்வாலும் பணியாலும் அனைவருக்கும் ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் ஒளிர்ந்திட வேண்டிய அருளை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. எம்மை நிறைவாக அன்பு செய்து வழிநடாத்தும் தந்தையே இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் நீர் எமக்குக் காட்டும் நேர்மையான பாதையில் நடந்து சென்று அனைவருக்கும் நற்செய்தியாக வாழ்வதற்கு வேண்டிய ஆசீரை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. வழியும் உண்மையும் வாழ்வுமான தந்தையே இறைவா! உலக நாடுகள் முழுவதிலும் மன விரக்தியாலும் உளவியல் பிரச்சனைகளாலும் தாக்கப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமரங்கி, மன அமைதியையும், சிறப்பான தீர்வுகளையும் அவர்களுக்குக் கொடுத்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. தளர்ந்துபோன கரங்களை வலுப்படுத்தும் தந்தையே இறைவா! பல்வேறு விதமான இழப்புக்களைச் சந்தித்து வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் உமது கருணையால் குணப்படுத்தி,  உமது பேரன்பால் அவர்களை நிறைவுபடுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.