இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவு
2022.11.02
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! சாவை ஒழித்து நிலைவாழ்வை பரிசளிக்கும் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் இறந்த நம்பிக்கையாளர் அனைவரையும் நினைந்து அவர்களுக்காக மன்றாடுவதற்காக ஒன்று கூடியுள்ளோம்.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவரையும் அழிய விடாமல் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்ய வேண்டுமென்பதே கடவுளின் திருவுளம் என்னும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கை கிறிஸ்து உறுதிப்படுத்துகின்றார். அதாவது நம் அனைவருக்கும் உயிர்ப்பு நிச்சயம் என்பதே இன்றைய செய்தியாகின்றது. எனவே நாம் இந்த உறுதிமொழியை ஆழமாக நம்பி, அவரிடமே எதிர்நோக்கு கொண்டு, மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம். அத்தோடு இறந்த அனைத்து நம்பிக்கையாளரின் நிலைவாழ்வுப் பேற்றிற்காக மன்றாடுவோம்.
முதல் வாசகம்
என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25:6-9
அந்நாளில் படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.
அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: “இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.”
ஆண்டவரின்; அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 23:1-6
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.
பல்லவி
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
பல்லவி
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-11
சகோதரர் சகோதரிகளே,
எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.
ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?
நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப் பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவு கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2திமொ 1:10
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே இறந்தோருள் முதலில் உயிர் பெற்று எழுந்தவர்; இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மகனில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 37-40
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி கூறியது: “தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பிய வரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும்.
இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்.”
ஆண்டவரின்; அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. நல் ஆயனாம் அன்புத் தந்தையே இறைவா!
உம்முடைய பணியைத் தொடர்ந்தாற்றி இறந்து போன எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவருக்கும் நிலைவாழ்வை பெரும் கொடையாக அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அமைதியான நீர் நிலைகளுக்கு எமை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா!
இறந்து போன அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் நிலைவாழ்வை பரிசளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா!
உலக நாடுகள் முழுவதிலும் வன்முறை, போர் ஆகியவற்றில் இறந்து போன அனைவருக்கும் நிலைவாழ்வை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இரக்கத்தின் தந்தையே இறைவா!
உலக நாடுகள் அனைத்திலும் உம்மிது நம்பிக்கை கொண்டு வாழ்வதற்காக துன்புறுத்தப்படும் அனைவருக்கும் பாதுகாப்பையும், தளராத நம்பிக்கை உறுதியையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.