திருநீற்றுப்புதன்
2023.02.22
முன்னுரை
இன்று திருநீற்றுப் புதன். இயேசுவோடு சேர்ந்து பயணித்து, நம்மைப் புதுப்பித்துக் கொண்டு இயேசுவின் பாஸ்காப் பலியை அர்த்தமோடு கொண்டாட நம்மைத் தயாரிக்கும் காலம்.
ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் நம்மைத் தொட்டுச் செல்லுகின்றது. நம்மைத் தொட்டுச் செல்லும் இத் தவக்காலம் நமக்கு விட்டுச் செல்லும் அழைப்பும், சிந்தனைகளும் அற்புதமானவை. கால மாற்றத்தால் கரைபட்டும் கறைபட்டும் போக முடியாத, மனித சிந்தனைகளால் மாற்றப்படவும், மறுக்கப்படவும் முடியாத ஆன்மிகப் பண்புகளையும், விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற இத்தவக்காலம், மனிதர் தமது வாழ்வைப் பசுமைப்படுத்த ஒரு சிறப்பான காலமாக அமைகின்றது. ஒரு வகையில் பார்த்தால் தவக்காலம் என்பது மனித வாழ்விற்கு ஒரு வாசந்த காலமே. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி, வளமையும், மகிழ்ச்சியும் ஏற்பட நமக்கு வழிகளைத் திறந்து விடும் காலம் தவக்காலமே.
எனவே, நம் குற்றங்களை நாம் உணர்ந்து, இறைவனுக்கு எதிராக நாம் பாவம் செய்தோம் என்பதை ஏற்றுக் கொண்டு, வாழ்வு மாற்றத்திற்காய் நம்மை அர்ப்பணித்தவர்களாய்த் இத்திருப்பலியில் பங்கேற்போம்
முதல் வாசகம்
நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்.
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2:12-18
ஆண்டவர் கூறுகிறார்; இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?
சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.
ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், “ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்” எனச் சொல்வார்களாக! ‘அவர்களுடைய கடவுள் எங்கே?’ என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?
அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 51: 1-4, 10-12, 15
பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும்.
பல்லவி
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்.
பல்லவி
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
பல்லவி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எமுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20- 6:2
சகோதரர் சகோதரிகளே,
நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். “தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்” எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.
நற்செய்தி வாசகம்
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
மத்தேயு எமுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6, 16-18
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது :”மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக் கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்”.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. உறுதியின் உறைவிடமான தந்தையே இறைவா! உமது பணியாளர்களாம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொது நிலைப்பணியாளர்கள் அனைவருள்ளும் தூயதோர் உள்ளத்தை படைத்து, உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை உருவாக்கி மனமாற்றத்தின் மாதிரிகளாக விளங்கச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எம்மைத் தூய்மைப்படுத்திப் பாதுகாக்கும் தந்தையே இறைவா! நாங்கள் எங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாமல், இந்நாட்களில் எம்மோடு பேசும் உமது குரலைக் கேட்டு பகைமை உணர்வுகளை விலக்கி உறவின் சமூகமாக வாழும் மன நிலையை எம்மிடம் உருவாக்கியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. மீட்பளிக்கும் தந்தையே இறைவா! பாவம், போதைப் பொருள் பாவனை, குடி வெறி, களியாட்டம், தீய வாழ்வு ஆகியவற்றிற்குள் அகப்பட்டுப் போய்க் கிடக்கும் அனைவருக்கும் உமது மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் அவர்களுக்கு அளித்து, தன்னுணர்வு மனம் தந்து அவர்களைத உமது கரங்களுக்குள் தாங்கி விடுவித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இரக்கத்தின் ஆண்டவரே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம் என்னும் தன்னுணர்வு பெற்று கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்காது, வெளிவேடம் அகற்றி உண்மைச் சீடர்களாய் வாழுவதற்கு வேண்டிய சக்தியை எமக்களித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.