பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு(04 மே 2025)
திருப்பலி முன்னுரை
இன்று பாஸ்கா காலத்தின் 3ஆம் ஞாயிறாகும். இறைவனிடம் நம்மையே கையளித்து அவரது விருப்பத்திற்கேற்ப நாம் வாழ்ந்து ஆன்மிக வாழ்வில் முதிர்ச்சியடைய இன்றைய வாசகங்கள் வழியாக திருஅவை எமக்கு அழைப்பு விடுக்கின்றது.
திருத்தூதர் பணிநூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில் புனித பேதுரு மனிதர்களுக்கு கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு கீழ்ப்படியவேண்டும் என திடமாக தலைமைக்குருவுக்கு கூறுகின்றார். இரண்டாம் வாசகத்தில் இயேசுவை ஆட்டுக்குட்டியாக உருவகப்படுத்தி கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு வல்லமையும், ஞானமும், ஆற்றலும் என்றென்றும் உரியன என்று கூறி இயேசுக்கிறிஸ்துவை அனைத்துலக அரசராக புகழுகின்றார். யோவான் நற்செய்தியில் சீடர்களுக்கு காட்சி தரும் இயேசு திருத்தூதர் பேதுருவை ஆயனாக நியமிப்பதை வாசிக்க கேட்போம்.
பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் தொடங்கி, புதிய ஏற்பாட்டில் அன்னை மரியா, புனித சூசையப்பர் என பலர் இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தனர். இவர்களை முன்மாதிரிகையாக கொண்டு நம் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் உளச்சான்றுடன் இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்தவர்களாக இறை நம்பிக்கையோடு வாழ்வதன் மூலம் எம் ஆன்மிக வாழ்வில் முதிர்ச்சியடைய அருள்வேண்டி தொடரும் திருப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
முதல் வாசகம்
இவற்றுக்கு நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27b-32, 40b-41
அந்நாள்களில்
தலைமைக் குரு திருத்தூதர்களை நோக்கி, “நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!” என்றார். அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர்.
இனி இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாது என்று திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
பதிலுரைப் பாடல்
திபா 30: 1,3. 4-5. 10-11a,12b (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைத்தூக்கிவிட்டீர்.
1ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.3ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். – பல்லவி
4இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.5அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. – பல்லவி
10ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.11aநீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;12bஎன் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். – பல்லவி
இரண்டாம் வாசகம்
கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் பெறத் தகுதி பெற்றது.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 11-14
யோவான் நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது” என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள்.
பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், “அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என்று பாடக் கேட்டேன். அதற்கு அந்த நான்கு உயிர்களும், ‘ஆமென்’ என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று கூறி, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.
இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.
மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார்.
இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்றார்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்
மன்றாட்டு
- அன்பான இறைவா! திருஅவையின் திருப்பணியாளர்கள் திருத்தூதர்களைப் பின்பற்றி காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப தம்மை, தமது பணியுக்திகளை புதுப்பித்து கத்தோலிக்க திருஅவையை தூய்மையிலும், ஒற்றுமையிலும், சமத்துவத்திலும் என்றும் பாதுகாத்து இறைமக்களை வழிநடத்த வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இயேசுவே! எங்கள் நாவினால் எம்முடன் வாழும் அயலவர்களை பழித்துரைத்திருக்கின்றோம். பண்பற்ற பேச்சினால் பலரது வாழ்வை சீர்குலைத்து, அவர்களது நன்மதிப்பை இழக்கச்செய்திருக்கின்ே;றாம். இறைவா! குற்றமற்ற மனச்சான்றுடன் உம்மை மட்டுமே அன்பு செய்து பிறருக்கு அநியாயத்தீர்ப்பிடாமல் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இறையன்பரே! வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, நோயின் தாக்கம், பிள்ளைகளின் கல்வி மேம்பாடு என் பல்வேறு பட்ட பிரச்சினைகள், துன்பங்கள் எம்மை நாலாபுறமும் சூழ்ந்துகொள்ளும் போது, நாங்கள் இறைநம்பிக்கையில் நிலைத்திருக்கவும், இறைபக்தியில் வளரவும் அருள்தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- காப்பாளனே இறைவா! உணவு, உடை போன்ற அத்தியவாசியப்பொருட்களை தேவைக்கதிகமாக கொள்வனவு செய்வது மட்டுமல்லாது வீண்விரயமாக்கினோம். எம்மை மன்னியும். எம்மிடமுள்ளவற்றை தேவையிலிருப்போருடன் பகிர்ந்து வாழும் நல்லிதயத்தை எமக்கருள வேண்டுமென்றுஇறைவா உம்மை மன்றாடுகின்றோம்.