பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 15ஆம்  ஞாயிறு (14 ஜூலை 2024)

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக்காலத்தின் 15ம் வாரமாகும். தூய வாழ்வுக்கும், நீதியின் சார்பாக நிலைப்பாடு எடுக்கவும், கிறிஸ்துவின் அன்பின் வழியில் பணி செய்யவும் இன்றைய வாசகங்கள் வழியாக தாய்த்திருச்சபை எம்மை அழைக்கின்றது. 

முதல் வாசகத்தில் ஆமோஸ் இறைவாக்கினர் கடவுள் தன்னை அழைத்தது குறித்து அமாட்சியாவிடம் எடுத்துக்கூறுவதையும், இரண்டாம் வாசகத்தில் நாம் கிறிஸ்து வழியாக எவ்வாறு தேர்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும், நற்செய்தியில் இயேசு தனது பணி பிறவினத்தவரையும் சென்று சேர வேண்டுமென்பதற்காக தனது சீடர்களை இருவர் இருவராக அனுப்புவதையும்     வாசிக்க கேட்போம்.

திருமுழுக்கின் வழியாயக தூய ஆவியைப்பெற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவரும் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, அவரது உரிமை பேற்றுக்கு உரியவர்களாக வாழ வரம் கேட்டு தொடரும் கல்வாரிப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

முதல் வாசகம்

என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 12-15

அந்நாள்களில்

பெத்தேலின் குருவாகிய அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.

ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார்.”

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8 ab,9. 10-11. 12-13 (பல்லவி: 7)

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

8 ab ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். – பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். – பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். – பல்லவி

இரண்டாம் வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-14

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக்கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார்.

இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந் தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.

கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்துபாட வேண்டுமென அவர் விரும்பினார். நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபே 1: 18-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு பன்னிருவரையும் இருவர் இருவராக அனுப்பினார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

அக்காலத்தில்

இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்.

அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார். மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

 

மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார்.

அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. நீர் அழைத்த குரலுக்கு செவிசாய்த்த திருஅவையின் திருப்பணியாளர்கள் இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்து தமக்களிக்கப்பட்ட இறைபணியை செய்திட நீரே இவர்களை பாதுகாத்து வழிநடத்த வேண்டுமேன்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. தவறு செய்யாமல் சூழ்நிலை காரணமாக சிறையில் தண்டனை அனுபவிக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டுமென்று இறைவா  உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எம் பிள்ளைகள் மத்தியில் இறையழைத்தலின் முக்கியத்துவத்தை விதைத்திடவும், நன்மை தீமையை பகுத்தறிந்திடவும் அவர்களுக்கு தூய ஆவியாரின் வரங்களை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. நற்செய்தி பணிக்காக தாயகம் விட்டு வெளிநாடுகளில் பணியாற்றும் குருக்கள் இடர்களிலும், துன்பங்களிலும் மனவுறுதியோடு, இறையாட்சிக்கு பணியாற்ற வேண்டிய உடல் உள ஆரோக்கியத்தை அளித்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.