பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு(21 ஜூலை 2024)
திருப்பலி முன்னுரை
இயேசுக்கிறிஸ்து நமக்களித்த புதிய வாழ்வை பிறரோடு பகிர்ந்து வாழ பொதுக்காலத்தின் 16ம் ஞாயிறாகிய இன்றைய வாசகங்கள் எமக்கு வெளிப்படுத்துகின்றன.
முதல் இறைவாக்கில் இஸ்ராயேலருக்கு இறைவன் நல்ல ஆயனாக என்றும் இருக்கின்றார் என்பதை இறைவாக்கினர் எரோமியா வழியாக வெளிப்படுத்துவதையும், இயேசு நல்ல வழிகாட்டி, தலைவர் என்பதனை தூய பவுல் எபேசு நகர மக்களுக்கு எடுத்துக்கூறுவதையும், மாற்கு நற்செய்தியில் இயேசு தம்மை தேடி வந்த மக்கள் மீது பரிவு கொண்டு தன்னையே நல்ல ஆயனாக அறிமுகப்படுத்துவதையும் வாசிக்க கேட்போம்.
எமது அன்பை, உடனிருப்பை, நேரத்தை பிறருடன் பகிர்ந்து வாழ நல்லிதயத்தை எமக்கருள வேண்டி தொடரும் திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.
முதல் வாசகம்
ஆடுகளைக் கூட்டிச் சேர்த்து, அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 1-6
ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு!
தம் மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப் போகிறேன் என்கிறார் ஆண்டவர்.
என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப்பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக் காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.
ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். ‘யாவே சித்கேனூ’ – ஆண்டவரே நமது நீதி – என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3a அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். – பல்லவி
3 b தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்; 4 சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி
5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி
6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி
இரண்டாம் வாசகம்
இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 13-18
சகோதரர் சகோதரிகளே,
ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்.
ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்.
அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தனர்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34
அக்காலத்தில்
திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
- திருச்சபையின் ஞானமேய்ப்பர்கள் அனைவரும் தமது போதனை, பணிவாழ்வின் மூலமாக இறையன்பை பிறரன்பில் வெளிப்படுத்தி வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- கிறிஸ்து கொண்டு வந்த மகிழ்ச்சியை எம்குடும்பங்களிலும், அயலவர்களிடமும் தொடர்ந்து பிறரன்பு செயல்கள் மூலமாக வெளிப்படுத்தி வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எமது கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றாகிய நற்கருணையின் மீதுள்ள விசுவாசம் ஆழம் பெறவும், அதன் பண்புகளாகிய அன்பு, ஒற்றுமை, பகிர்தல், தியாகம் போன்றவற்றை நம் வாழ்விலும் பிரதிபலிக்க வரம் தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நாம் ஒவ்வொருவரும் இறைவார்த்தையில் வேரூன்றி, அன்றாடம் அதை வாசித்து சவால்கள் நிறைந்த உலகில் நிறைந்த பலன் தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.