பொதுக்காலம் 33ம் ஞாயிறு

பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு(17 நவம்பர் 2024)

திருப்பலி முன்னுரை

இறையச்சத்தோடும், இறை விசுவாசத்தோடும், எந்நேரமும் நாம் விழிப்போடு வாழ அறிவுறுத்துகின்றது பொதுக்காலத்தின் 33ம் வார வாசகங்கள்.

தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் இறைவாக்கானது இறைவன் வரும்போது இறந்தோர் உயிர்த்தெழுவர், இறுதி தீர்பு, உலக முடிவு என மூன்று நிகழ்வுகள் நடைபெறும் எனக்கூறுகின்றது. இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு என மூன்றையும் உள்ளடக்கியதுதான் கிறிஸ்துவின் உயிர்த் தியாகப்பலி என கூறுகின்றது இரண்டாம் வாசகம். இயேசு தனது வருகையை உறுதி செய்யும் விதமாக தம் சீடர்களுக்கு இன்றைய நற்செய்தியில் விளக்குகின்றார்.

எமது அன்றாட வாழ்வில் ஆண்டவரின் வருகைக்காக, நாம் எப்பொழுதும் கவனமாக இருந்து, நம்முடைய ஆன்மீக பொறுப்புக்களையும், கடமைகளையும் சிறப்பாக நிறைவேற்ற வரம் வேண்டி தொடரும் திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

முதல் வாசகம்

உன் இனத்தார் விடுவிக்கப்படுவர்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3

“அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்.

ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.”

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். – பல்லவி

9  என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். – பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. – பல்லவி

இரண்டாம் வாசகம்

 ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14, 18

சகோதரர் சகோதரிகளே,

ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார்.

தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவ மன்னிப்புக் கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.

அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.

ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. திருச்சபையின் திருப்பணியாளர்கள் இயேசு விடுத்த மீட்புப்பணியின் அழைப்பை உணர்ந்து பணியாற்றிட இவர்களுக்குத்தேவையான ஞானத்தை அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் தூய பவுலின் அறிவுரையை பின்பற்றி காலத்தின் அறிகுறிகளை நன்கு கற்றுணர்ந்து, இருள்செயல்களை கைவிட்டு, ஒளியின் மக்களாக திகழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. முடிவில்லா இறையாட்சியில் பங்கேற்க நாம் இரக்கமுடையோராக, தூய்மையுடையோராக, அமைதியை நாடுவோராக, துன்பவேளையிலும் இறைநம்பிக்கையில் உறுதியாக இருப்பவர்களாக வாழ்வதற்கு வேண்டிய நல் மனவுறுதியை எமக்களித்ருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. திருவழிபாட்டு ஆண்டின் இறுதிநாட்களில் பயணம் செய்யும் நாம் இந்த ஆண்டுமுழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும், எமக்களித்த  அனைத்து நலன்களுக்கும் நன்றி கூறும் அதேவேளை தொடர்ந்து எமக்கு அதே நலன்களை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.