கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா

இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா(24 நவம்பர் 2024, ஞாயிறு)

திருப்பலி முன்னுரை

இன்று இயேசுக்கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழாவைக் கொண்டாட இவ்வாலயத்தில் ஒன்று கூடியுள்ளோம்.

கிறிஸ்து அரசராக ஆட்சியுரிமை பெறுகின்ற நிகழ்வானது தானியேலின் கனவில் காட்சியாக வெளிப்படுத்தப்பட்டதை முதல் இறைவாக்கிலும், இறந்தோருள் முதலில் உயிர்பெற்ற இயேசுக்கிறிஸ்துவின் அரசு எப்படி இருக்கும் என்பதை இரண்டாம் இறைவாக்கிலும், பிலாத்துவின் முன் இயேசு தாமே உண்மையான அரசர் என்பதை உறுதியாக எடுத்துக்காட்டும் நிகழ்வை நற்செய்தியிலும் வாசிக்க கேட்போம்.

தன்னைத் தானே வெற்றி கொண்டு, தரணியை வெற்றி கொண்டு, தனித்துவமிக்க அரசராக திகழும் இயேசுக்கிறிஸ்துவின் அரசத்தன்மையை உள்வாங்கி, அவற்றை நம் வாழ்வில் செயலாக்குவதன் மூலம் கிறிஸ்துவின் விண்ணக ஆட்சியுரிமையில் பங்கேற்க வரம் வேண்டி தொடரும் கல்வாரிப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம்

மானிட மகனின் ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 13-14

அந்நாள்களில் இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 93: 1a-c. 1de-2. 5 (பல்லவி: 1ab)

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

1 a-cஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். – பல்லவி

1 de பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. 2உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். – பல்லவி

5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். – பல்லவி

இரண்டாம் வாசகம்

மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் நம்மைக் குருக்களாக ஏற்படுத்தினார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 5-8

கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.

இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!

“அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 11: 10

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அரசன் என்று நீர் சொல்கிறீர்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37

அக்காலத்தில்

பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார்.

அதற்குப் பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?”என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார்.

பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. அன்பின் இறைவா! திருச்சபையின் திருப்பணியாளர்கள் உம்மோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவில் கொண்டு உம்மையே பற்றிக்கொண்டு தாமும் உம்வழி சென்று,  இறைமக்களை உம் பாதை நோக்கி வழிநடத்த வரம்தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. இறையாட்சியை நோக்கி பயணிக்கும் உம் பிள்ளைகளாகிய நாம் ஒரே எதிர் நோக்கோடு இறுதிவரைக்கும் நற்காரியங்களைச் செய்வதன் மூலம் உம்மால் ஆசீர் பெற்ற மக்களாக உம்மிடம் வந்து சேர வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எம் இளைஞர், யுவதிகள், மாணவர்கள் இறைவார்த்தை வாசிப்பினை பழக்கமாக்கி கொள்ளவும், உம் வார்த்தைகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. நாட்டை ஆளும் அனைத்து தலைவர்கள் நீர் காட்டுகின்ற அமைதியை, உமது அரசுத்தன்மையை உள்வாங்கி நற்பணியாற்றிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.