15th Sunday in Ordinary Time

பொதுக்காலம் பதினைந்தாம்  ஞாயிறு

2023.07.16

 

முன்னுரை

 

கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே, மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கிடும் நம் இறைத்தந்தையின் திருநாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை, இறைவார்த்தையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும். இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்பவர்கள், நூறு மடங்காகவும், அறுபது மடங்காகவும் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர் என்பதே இன்றைய இறைச் செய்தியாக நமக்குக் கிடைக்கின்றது.

 

இந்த இறைச் செய்தியைக் கேட்கின்ற நாம், நமது உள்ளத்தையும், வாழ்வையும், பணியையும் நல்ல நிலமாக்கி, இறை வார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொண்டு, நூறு மடங்காகவும், அறுபது மடங்காகவும் முப்பது மடங்காகவும் பயன் அளிப்போம். அதற்காக நம்மை அர்ப்பணித்து, இத்திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.

 

முதல் வாசகம்

 

மழை நிலத்தை நனைத்து, விளையச் செய்கிறது.

 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55:10 – 11

 

ஆண்டவர் கூறுவது:

 

மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன. அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல் திபா 65: 9-13

 

பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.

 

மண்ணுலகைப் பேணி அதன் நீர் வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது. அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது.
பல்லவி

 

நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர். அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர். அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.
பல்லவி

 

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர். உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலை நிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன. குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.
பல்லவி

 

புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன. பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன. அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை!
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.

 

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18- 23

 

சகோதர சகோதரிகளே,

 

இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது. தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை. அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று. எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.

 

இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல: முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 11:25

 

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதை, அதை விதைப்பவர் கிறிஸ்துவே: அவரைக் கண்டடைபவர் எல்லாரும் என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

விதைப்பவர் விதைக்கச் சென்றார்.

 

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1- 23

 

அக்காலத்தில்

 

இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்:

 

“விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். ஆவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன: ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.

 

சீடர்கள் அவர் அருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும். அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை. கேட்டும் கேட்பதில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:

 

‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது. காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக் கொண்டார்கள். எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்’.

 

உங்கள் கண்களோ பேறுபெற்றவை. ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை. ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

 

எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான்.

 

பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள். இறை வார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.

 

முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்”.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. உமது நலத்தால் முடிசூட்டுகின்ற தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர் கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும்; தமது வாழ்வை நல்ல நிலமாக்கி, இறைவார்த்தையை வாழ்வாக்கி ஆன்மிக நற்பலன்களைக் கொடுத்து, இனைவருக்கும், ஆறுதலாக இருந்திட வேண்டிய ஆற்றலை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கும் தந்தையே இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் எமது உள்ளத்தையும், வாழ்வை யும், பணியையும் நல்ல நிலமாக்கி, இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொண்டு, நூறு மடங்காகவும், அறுபது மடங்காகவும் முப்பது மடங்காகவும் பயன் கொடுத்து வாழுவதற்று வேண்டிய ஆற்றலை எமக்கு அளித்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரை அகற்றி விடும் தந்தையே இறைவா! இழப்புக்களோடும், இயலாமையோடும், அமைதியின்மையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரினதும் கண்ணீரைத் துடைத்து அவர்களுக்கு வேண்டிய ஆறுதலை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. உமது வார்த்தையை அனுப்பி நோய்களையெல்லாம் குணப்படுத்தும் தந்தையே இறைவா! மாற்ற முடியாத நோய்களோடு போராடிக் கொண்டிருக்கும் அனைவரை யும் ஆசீர்வதித்து, அவர்களுடைய நோய்களிலிருந்து அவர்களைக் குணமாக்கிட வும், எல்லா வைத்தியர்களையும் உமது அருளன்பால் நிரப்பிடவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.