21st Sunday in Ordinary Time

பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு

2023.08.27

 

முன்னுரை

 

நாம் மன்றாடும் நாளில் நமக்குச் செவிசாய்த்து, நம் மனத்திற்கு வலிமை அளிக்கும் நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை  என்னும் இறை              வார்த்தைகள் கடவுளையும், ஆன்மிகத்தையும் ஒதுக்கிவிட்டு மனித அறிவு, பொருளாதார, தொழில் நுட்ப வளர்ச்சி மாத்திரமே தமக்குத் தேவையென்று வாழுவோருக்கு சவாலாக அமைவதையும், நமது நாளாந்த நம்பிக்கை வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க அழைப்பதையும் நாம் கண்டுகொள்கின்றோம்.

எனவே நாம் ஒவ்வொருவரும் பேதுருவைப்போல,  “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று அறிக்கையிட்டு இயேசுவை முழுமனதுடன் ஏற்று வாழ இத்திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.

 

முதல் வாசகம்

 

தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன்.

 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 22:19-23

 

உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன். அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி,  உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான்.

 

அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்க மாட்டான். உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல் திபா 138:1-3,6,8

 

பல்லவி: ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.

 

ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்.
பல்லவி

 

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.
பல்லவி

 

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர். ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன.

 

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 33-36

 

சகோதர சகோதரிகளே,

 

கடவுளின் அருள்செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! “ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?” அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காவே இருக்கின்றன,  அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   மத் 16:18

 

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவு கோல்களை நான் உன்னிடம் தருவேன்.

 

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-20

 

அக்காலத்தில்

 

இயேசுஇ பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

 

அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.
பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்.

 

1. ஆழமான ஞானமும் அறிவும் நிறைந்த தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் நீர் கொடுக்கும் ஆழமான ஞானத்திலும், அறிவிலும் ஆர்வமுடையவர்களாய் உம்மிடமிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றிட நிறையருளை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. எம் மனத்திற்கு வலிமை அளிக்கும் தந்தையே இறைவா! துன்பங்களும், துயரங்களும், நோய்களும், சவால்களும் எம்மைத் தாக்குகின்றபோது நாம் நிலைகுலைந்து போகாமல் உமது அருட்துணையில் என்றும் நம்பிக்கைகொண்டு மனவலிமை யோடு செயற்பட எமக்கு சக்தி அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

 

3. நலிந்தோரைக் கண்ணோக்குகின்ற தந்தையே இறைவா! இரக்கமற்ற மனிதர்களாக, நீதியோடு, நேர்மையோடு நடந்துகொள்ளாமல், எம் உடன் மனிதர்களைத் துன்புறுத்தி, வேதனைப்படுத்தி, இன்பம் காணும் எல்லா மனிதர்களதும் கடின இதயங்களை மாற்றி இரக்கம் அவர்களில் ஊற்றெடுக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. நீதியின் தந்தையே இறைவா! எம் தமிழ் மக்களின் வேதனைகளை நீர் நன்கு அறிந்துள்ளீர். பார்வோனின் அடிமைத் தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை மீட் டது போல் அனைத்துக் கொடுமைகளிலிருந்தும், கொடியவர்களிடமிருந்தும் தமிழ் மக்கள் அனைவரையும் காப்பாற்றி, அவர்கள் தேடுகின்ற விடுதலை வாழ்வை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.