பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு
2023.09.03
முன்னுரை
இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே! உயிரினும் மேலான பேரன்புடையவரும், நமக்கு என்றும் துணையாக இருப்பவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் இருபத்திரெண்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். இந்த இறைவார்த்தைகள் நாம் எதை இழந்தாலும் கடவுளையும் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் இழந்துவிடக் கூடாது என்பதனை நமக்கு உணர்த்தி நிற்கின்றன.
எனவே நாம் உலகத்தின் பொருள்கள், செல்வங்கள், ஆட்கள், புகழ் ஆகியவற்றை ஆதாயமாக்கிக் கொள்ள உழைக்காமல், இறையரசை ஆதாயமாக்கிக் கொள்ள இத் திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
ஆண்டவரின் வாக்கு என்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20:7-9
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் ~வன்முறை அழிவு என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
“அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 63:1-5,7-8
பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது.
பல்லவி
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.
பல்லவி
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்.
பல்லவி
ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.
பல்லவி
இரண்டாம் வாசகம்
தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12:1-2
சகோதர சகோதரிகளே,
கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.
இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபே 1:18
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, என்னைப் பின்பற்றட்டும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21-27
அக்காலத்தில்
இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்றார்.
பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. அருள்மழை பொழியும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவர் மேலும் ஆவி மழை பொழிந்து நிறை உண்மையை நோக்கி அவர்கள் நடந்து, இவ்வுலகில் ஒப்பற்ற செல்வமாகிய உம்மையே ஆதாயமாக்கிக் கொள்ள உழைக்கும் மனநிலையையும், உமக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக தங்களை அளித்திடும் மனநிலையையும் அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. உயிரினும் மேலான பேரன்புடையவரான தந்தையே இறைவா! நாங்கள் உலகத்தின் பொருள்கள், செல்வங்கள், ஆட்கள், புகழ் ஆகியவற்றை ஆதாயமாக்கிக் கொள்ள உழைக்காமல், இறையரசை ஆதாயமாக்கிக் கொள்ள உழைக்கவும், உமக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக எங்களை அளித்திடவும் வேண்டிய இருளை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ஆன்மிகக் கண்களுக்கு ஒளியூட்டும் தந்தையே இறைவா! கவர்ச்சி, களியாட்டம்,ஆடம்பரம், புகழ் ஆகியவற்றில் சிக்கி நிலைகுலைந்து போகும் அனைவரின் அகக்கண்களையும் திறந்து, தங்கள் ஆன்மாவை கறைபடாமல் காத்தக்கொள்ள வேண்டியச க்தியை அவர்களுக்கு கொடுத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நீதியின் தந்தையே இறைவா! எம் தமிழ் மக்களின் வேதனைகளை நீர் நன்கு அறிந்துள்ளீர். பார்வோனின் அடிமைத் தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை மீட்டது போல் அனைத்துக் கொடுமைகளிலிருந்தும், கொடியவர்களிடமிருந்தும் தமிழ் மக்கள் அனைவரையும் காப்பாற்றி, அவர்கள் தேடுகின்ற விடுதலை வாழ்வை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன் றாடுகின்றோம்