பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு(18 மே 2025)
திருப்பலி முன்னுரை
பாஸ்கா காலத்தின் 5ஆம் வாரமாகிய இவ்வாரம் அன்பின் வாரமாகும். நம்மோடு இருந்து நமக்காக செயல்படும் கடவுளிடம் இறைநம்பிக்கை கொள்ளவும், எமக்காக சிலுவைச்சாவை ஏற்ற இயேசுக்கிறிஸ்துவின் தியாக அன்பை பிரதிபலித்து மகிழ்ச்சியாக வாழவும் வழிகூறுகின்றது இன்றைய வாசகங்கள்.
முதல் வாசகம் புனித பவுலும், பர்னபாவும் முதல் தூதுரைப்பயணத்தில் திருச்சபையின் மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்திய நிகழ்வை கூறுகின்றது. இரண்டாம் வாசகம் “புதிய விண்ணகத்தையும், மண்ணகத்தையும் கண்டேன்” என மீட்பை மட்டும் வெளிப்படுத்தும் யோவானின் திருவெளிப்பாட்டின் காட்சியை எடுத்துரைக்கின்றது. நற்செய்தியில் இயேசு இறுதியிராவுணவின் போது தம் அன்பை வெளிப்படுத்தி, திருத்தூதர்களுக்கு பிறரை நேசிக்க வேண்டுமென அன்புக்கட்டளையை நிறுவுகின்றார்.
அன்பானது இரக்கம், நட்பு, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு என பல்வேறு பரிநாமங்களைக் கொண்டது. கிறிஸ்துவின் அன்பு உயிரைக் கொடுக்கும் தூய அன்பு. அத்தகைய தன்னலமற்ற அன்பை நாம் உள்ளத்தில் பெற்றிடவும், இவ்வன்பை எம் கிறிஸ்தவ வாழ்வால் அயலவர்கள் சுவைத்திடவும் வரம்வேண்டி தொடரும் திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.
முதல் வாசகம்
திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 21b-27
அந்நாள்களில் பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள்.
அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
பதிலுரைப் பாடல்
திபா 145: 8-9. 10-11. 12-13ab (பல்லவி: 1)
பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.
8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். – பல்லவி
10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். – பல்லவி
12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13abஉமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. – பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 1-5
யோவான் நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று.
அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன” என்றது.
அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “ ‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33a, 34-35
யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.
‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்றார்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்
- அன்பின் கருவியாகிய இறைவா! புனித பேதுருவின் வழிநடக்கும் புதிய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் நல்ல மேய்ப்பர்களாக தன்னலம் துறந்து தூய உள்ளத்துடன் பணிபுரிந்து இறைவனின் அரசாட்சியை உலகில் வளர்த்திட வேண்டிய அனைத்து வரங்களையும் நீரே இவர்களுக்கு பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- நம்பிக்கையின் நாயகனே இறைவா! எங்களையும் எங்கள் சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் உம் பாதம் வைக்கிறோம். அவற்றை உமது கரத்தால் தொட்டு ஆசீர்வதியும். எமக்கு உமது தூய ஆவியின் கொடைகளைப் பொழிந்து உம் பிள்ளைகளாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- உன்னதரே எம் இறைவா! வளர்ந்து வரும் இச்சமூகத்தில் பகைவரிடமும் அன்பு என்ற பொன்மொழி மறைந்து வரும் இக்காலக்கட்டத்தில் அன்புணர்வோடு எங்கள் பகைவர்களை மன்னித்து, அன்பு செய்து அரவணைக்க வேண்டிய ஆற்றலையும் நல்லுள்ளத்தையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- ஏங்குவோருக்கு ஆறுதலே இறைவா! படிப்பு, வேலை, தொழில், திருமணம், வளமான வாழ்வு, ஆராக்கியமான உடல், ஒற்றுமை, சமாதானம், மகிழ்ச்சி இவையனைத்தும் இல்லையே என ஏங்கும் அனைத்து உள்ளத்தோருக்கும், அவரவர் தேவைகளை நிறைவேற்றி, அவர்களை பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.