20th Sunday in Ordinary Time

பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

20.08.2023

 

முன்னுரை

 

இரக்கத்துக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். நம்பிக்கையின் வலிமையை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது துன்ப நேரங்களில் ஆண்டவரின் இரக்கத்தைப் பெற, நம்பிக்கையோடு அவரை தொந்தரவு செய்ய வேண்டுமென இன்றைய நற்செய்தி கற்பிக்கிறது. உதவி தேடிச் சென்ற கானானியப் பெண்ணிடம் இயேசு பாராமுகமாய் நடந்துகொள்வதை காண்கிறோம். நாமும் பல நேரங்களில் ஆண்டவரின் இரக்கத்தைப் பெறுவதற்கு தகுதியற்றவர்களாய் இருக்கலாம். அப்போது நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டால், நாம் ஆண்டவரின் உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்ற உண்மையை உணர அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் முன்னிலையில் நமது தாழ்நிலையை உணர்ந்து வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

பிற இன மக்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்;து வாசகம் 56:1,6-7

 

ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்.

 

ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்புகூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக் கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்   திபா 67:1-2.4-5,7

 

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

 

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்.
பல்லவி

 

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழி நடத்துகின்றீர்.
பல்லவி

 

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை.

 

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11:13-15,29-32

 

சகோதரர் சகோதரிகளே!

 

பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்: உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன். இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்க முடியும் என நம்புகிறேன். யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது எப்படி இருக்கும்! இறந்தோர் உயிர் பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா?

 

ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்கு உரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா

 

நற்செய்தி வாசகம்

 

அம்மா, உமது நம்பிக்கை பெரிது.

 

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15:21-28

 

அக்காலத்தில்

 

இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவீதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.

 

சீடர்கள் அவரை அணுகி, ” நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

 

ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக் குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே” என்றார். இயேசு மறு மொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுகள்

 

1. இரக்கத்தின் உருவே இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது இரக்கத்தின் கருவிகளாக செயல்பட்டு, மக்களிடையே பிறரன்பு செயல்களைத் தூண்டி எழுப்புபவர்களாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

 

2. என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
நாங்கள் ஒவ்வொருவரும், உமது வழியை அறிந்துகொண்டும், நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொண்டும், உம்மீது உறுதியான நம்பிக்கை கொண்டும் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. எங்கள் தந்தையாகிய இறைவா!
துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர்மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள் மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. அனைவருக்கும் இரக்கம் காட்டும் அன்புத் தந்தையே இறைவா!
எம் இளைஞர்கள் அனைவர் மீதும் உமது நிறை ஆசியை வழங்கி! அவர்களை உமது அன்பின் ஆளுகைக்குள் வைத்துக் காத்து வழிநடாத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

5. இரக்கத்தின் ஊற்றே இறைவா,
நாங்கள் வகுத்துக்கொண்ட குறுகிய எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்று, உம் வல்லமையில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.