பொதுக்காலம் 5ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இன்று பொதுக்காலத்தின் 5ம் ஞாயிறாகும். இன்ப துன்பவேளைகளில் இறைவேண்டல் செய்வதும், பிறர் நலம் பேணுவதும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழியாகும் என இன்றைய வாசகங்கள் எமக்கு எடுத்துக்கூறுகின்றன.
யோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில் சாத்தானின் சோதனையால் துன்பத்திற்குள்ளான யோபு கடவுளிடம் புலம்புவதையும், இரண்டாம் இறைவாக்கில் புனித பவுல் தனது நற்செய்திப்பணியில் தான் பெற்ற மனநிறைவே தனது ஊதியம் என கொருந்திய மக்களுக்கு மகிழ்வுடன் கூறுவதையும், மாற்கு நற்செய்தியில் போதித்தலிலும், குணமளித்தலிலும் தம் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்த இயேசு கடவுளிடம்; தனியாக இறைவேண்டல் செய்தபின் எல்லா இடங்களுக்கும் நற்செய்தியை அறிவிக்க சென்றைதை வாசிக்க கேட்போம்.
நற்செய்திப்பணியின் அடித்தளம் ஜெபம் என்பதை உணர்ந்தவர்களாக நாம் எமது வாழ்வில் வரும் சோதனைகளை ஏற்று வெற்றி கொண்டு இறையாட்சியை உரிமையாக்கி கொள்வதற்கு வேண்டிய இறைநம்பிக்கையை எமக்களித்திட வேண்டி தொடரும் திருப்பலியில் வேண்டுவோம்.
முதல் வாசகம்
விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன்.
யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4, 6-7
யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன்.
என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 147: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 3a)
பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்.
1நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. 2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். – பல்லவி
3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். 4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். – பல்லவி
5 நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. 6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். – பல்லவி
இரண்டாம் வாசகம்
நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23
சகோதரர் சகோதரிகளே,
நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 8: 17
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
பல்வேறு பிணிகளால் வருந்தியவரை இயேசு குணப்படுத்தினார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39
அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
- திருச்சபையின் திருப்பணியாளர்கள் இயேசுவைப்பின்பற்றி இவ்வுலகமக்கள் அனைவருக்கும் துணிவுடன் உம் அருள்வாக்கை எடுத்துரைக்கவும், வாழ்ந்து காட்டிடவும் வேண்டிய வரங்களை வழங்கிடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- சீமோனின் மாமியாரைப்போல நாமும் தீமை எனும் காய்ச்சலிலிருந்து குணமடைந்து பிறரன்புப்பணிகளில் ஈடுபட உடல், உள நலத்தை எமக்கருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார தேவைகள், ஆன்மீகத்தேவைகளை நிறைவேற்றி காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
- ஆங்காரம், கோபம், பொறாமை, சோம்பல், பழவாங்கல் போன்ற தீயபண்புகளைக்களைந்து, தாழ்ச்சி, பொறுமை, ஈகை, பிறர்சிநேகம் ஆகிய நற்பண்ளுடன் கிறிஸ்துவின் சாட்சிய வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.