பொதுக்காலம் 22ம் ஞாயிறு

பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு (01 செப்டம்பர் 2024 )

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக்காலத்தின் 22ம் வாரமாகும். சட்டம் மனிதனுக்காக இருக்கிறதே தவிர மனிதன் சட்டத்திற்காக இல்லையாதலால் சட்டங்களை சரியான மனப்பக்குவத்தோடு கடைப்பிடிக்க அழைக்கப்படுகின்றோம்.

முதல் இறைவாக்கில் மோசே இறைவனின் சட்டங்கள் ஞானத்தை உள்ளடக்கியது என்றும் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இரண்டாம் இறைவாகில் யாக்கோபு இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி வாழவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். மனித மாண்பையும், மனித நலன்களையும் மேம்படுத்தாத சட்டங்கள், பழக்கவழக்கங்கள் போலியானது என்று பகிரங்கமான இயேசு சாடுவதை நற்செய்தி விளக்குகின்றது.

ஒப்புரவு அருட்சாதனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக அகத்தூய்மைக்கு முக்கித்துவம் கொடுத்து தொடரும் கல்வாரிப்பலியில் நம் பாவங்களுக்காக இறைவனிடம் இறைமன்னிப்பையும், இறைபராமரிப்பையும் வேண்டுவோம்.

முதல் வாசகம்

நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2, 6-8

இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள்.

நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3 a. 3 bc-4 ab. 5 (பல்லவி: 1 a)

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

2 மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3a தம் நாவினால் புறங்கூறார். – பல்லவி

3 b c தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 ab நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். – பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; – இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21 b-22, 27

சகோதரர் சகோதரிகளே,

நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8, 14-15, 21-23

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.

அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்து கின்றன” என்றார்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. திருஅவையில் திருப்பணியாளர்கள் அனைவரது ஆன்மீக வாழ்வை நீர் நிறைவாக ஆசீர்வதித்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், அறிதிறன்குறைபாடுடையோரனைவரும் உடல், உள நலத்தையும், பாதுகாப்பையும், பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எம் சமூக வாழ்வியலில் பகைமை, பொறாமை, ஆணவம் என நாம் செய்த பாவங்களிலிருந்து எம்மை மன்னித்து மீட்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அன்னை மரியாளைப் பின்பற்றி இறைசித்தத்தை பணிந்தமனத்துடன் ஏற்றுக்கொள்ளவும், செபமாலை பக்தியை எம் குடும்பங்களில் வளர்த்திடவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.