SIXTH SUNDAY OF EASTER 2022

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு

2022.05.22

 

முன்னுரை

 

அன்பு நிறை சகோதர சகோரிகளே! நம்மீது இரங்கி, நமக்கு ஆசி வழங்கும் நம் ஆண்டவரின் நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி பாஸ்கா கால ஆறாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

 

அன்பு வாழும் உள்ளங்களே கடவுள் தங்கும் ஆலயம். நம்மிலே அன்பு வாழ, நாம் இறைவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இறைவழி செல்லவும், இறைவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அன்பு செய்து வாழவும் தூய ஆவியானவர் நமக்கு துணையாக இருந்து வழிகாட்டுகின்றார். இவையே இன்று இறைவார்த்தைகள் வழியாக நமக்கு வழங்கப்படும் செய்தியாகும்.

 

சவால்கள் நிறைந்த வாழ்வினூடே பயணித்துக் கொண்டிருக்கும் நாம், அன்பைப் பகிரவும், அன்பைப் பெறவும், இறைவனுடைய கட்டளைகளின்படி வாழவும் வரம் வேண்டித் தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

இன்றியமையாதவற்றைத் தவிர, வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று நாங்கள் தீர்மானித்தோம்.

 

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்    15:1-2, 22-29

 

அந்நாள்களில்

யூதேயாவிலிருந்து வந்த சிலர், “நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது” என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

 

பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.

 

அக்கடிதத்தில், “திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவேஇ நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவேஇ நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

 

இன்றியமையாதவற்றைத் தவிர, அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்” என்று எழுதியிருந்தார்கள்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்   திபா 67: 1-2, 4-5, 7

 

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் புகழ்வார்களாக!

 

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்.
பல்லவி

 

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.
பல்லவி

 

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!                                                                               பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.

 

திருத்தூதர் யோவான் எமுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம்   21: 10-14,22-23

 

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று. விலையுயர்ந்த கல்போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. அதைச் சுற்றி பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக் குட்டியுமே அதன் கோவில். அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாவோ தேவைப் படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14:23

 

அல்லேலூயா, அல்லேலூயா! ‘என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்கிறார். ஆண்டவர். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்.

 

யோவான் எமுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 23-29

 

அக்காலத்தில்

 

இயேசு பின்வருமாறு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.

உங்களோடு இருக்கும் போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

 

அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1.  அனைத்தையும் கற்றுத் தரும் தந்தையே இறைவா! நீர் அழைத்துள்ள எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவறத்தார் அனைவரும், உமது கட்டளைகளைக் கடைப்பிடித்து அன்பின் ஆலயங்களாகவும், அனைவருக்கும் ஆறுதலாகவும் ஆசீர்வாதமாவும் திகழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குகின்ற தந்தையே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் தூய ஆவியானவரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அன்பைப் பகிரவும், அன்பைப் பெறவும், இறைவனுடைய கட்டளைகளின்படி வாழவும் வேண்டிய ஞானத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. திக்கற்றவர் கூவியழைக்க அவர்களுடைய குரலைக் கேட்டருளும் தந்தையே இறைவா! புலம் பெயர்ந்த நாடுகளிலே வதிவிட அனுமதியின்றியும், வேலையின்றியும் அல்லற்படும் அனைவர் மீதும் மனமிரங்கி அவர்களுடைய குறையைப் போக்கி நிறை மகிழ்ச்சியை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. என்றுமே மாறாத தெய்வமே இறைவா! உலகில் இன்று பெருகிவரும் பொய்யான போதனைகள், வழிகாட்டுதல்கள், வன்முறை, போர் இவற்றிலிருந்து மக்களைக் காத்து உலகில் நிலையான அமைதி நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.